
டெல்லி: ஐபிஎல் போட்டிகளில் 4 மற்றும் 6 ரன்கள் என 600 முறை பந்தை பவுண்டரிக்கு அனுப்பியுள்ளார் கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிறிஸ் கெயில்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்துள்ளது. இதுவரை நடந்துள்ள 10 சீசன்கள் மற்றும் இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் நான்கு மற்றும் 6 ரன்கள் என, 600 முறை பவுண்டரிக்கு பந்தை அனுப்பிய சாதனையை பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் படைத்துள்ளார்.

106 ஆட்டங்களில் 314 பவுண்டரிகள், 290 சிக்சர்கள் என, 604 முறை பந்தை பவுண்டரிக்கு அனுப்பியுள்ளார். மேலும் அவர் எடுத்துள்ள மொத்த ரன்களில், 76 சதவீத ரன்களை பவுண்டரிகள் மூலமே பெற்றுள்ளார்.
ரெய்னாதான் டாப்
ஐபிஎல் வரலாற்றில் அதிக பவுண்டரிகள் அடித்துள்ள சாதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்ன தல சுரேஷ் ரெய்னாவிடம் உள்ளது. அவர் 430 பவுண்டரிகள், 181 சிக்சர்கள் என, 611 முறை பந்தை பவுண்டரி எல்லைக்கு அனுப்பியுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 414 பவுண்டரிகள், 172 சிக்சர்கள் என, 586 முறை பந்தை எல்லைக் கோட்டுக்கு வெளியே அனுப்பியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா 375 பவுண்டரிகள், 183 சிக்சர்கள் என, 558 முறை பந்தை பவுண்டரிக்கு அனுப்பியுள்ளார்.