ராஞ்சி : இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி தன்னுடைய மகள் மற்றும் மனைவியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். 43 வயதான தோனி, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்.
சிஎஸ்கே அணியில் ஜாம்பவானாக விளங்கும் தோனி புதிய விதிப்படி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆனதால் அவர் அன்கேப்டு வீரராக அறியப்படுகிறார். இந்த சூழலில் தோனி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஐபிஎல் தொடருக்கு பயிற்சி எடுக்க தீவிரம் காட்ட உள்ளார்.

தோனிக்கு காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனினும் அவரால் 100% முழுமையாக கிரிக்கெட் போட்டிகளில் தன்னுடைய திறனை வெளிப்படுத்த முடியவில்லை. தமக்கு இருக்கும் பின்னடைவை சரி செய்யும் முயற்சியில் அவர் ஈடுபடப் போகிறார்.
இந்த நிலையில் உலகம் முழுவதும் இன்று இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் என்று கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் நாள் அன்று சாண்டா கிளாஸ் எனப்படும் நபர் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு தாங்கள் மிகவும் நேசிக்கும் பொருளை பரிசாக வழங்குவார் என்பது ஐதீகம்.

இந்த நிலையில் தோனி தனது மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஜிவாவுடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தோனி கிறிஸ்மஸ் தாத்தா போல் வேடம் அணிந்து தனது மனைவி மகளுடன் இந்த பண்டிகையை கொண்டாடி இருக்கிறார்.இதனை சமூக வலைத்தளத்தில் அவருடைய மனைவி சாக்ஷி பதிவிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தைப் பார்த்து தாங்கள் பார்த்ததிலேயே சிறந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்ட புகைப்படம் என்றால் அது இதுதான் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். பலரும் இது சாண்டா கிளாஸ் கிடையாது தல கிளாஸ் என்று பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் ஜிவாவுக்கு எதிர்பார்த்த பரிசு கிடைத்தது போல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்க்கும் பரிசை தோனி வரும் ஐபிஎல் சீசனில் வழங்குவார் என்று தங்களது ஆசையை பதிவிட்டு இருக்கிறார்கள்.