டெல்லி: இந்திய பந்துவீச்சாளர் இர்பான் பதானை சூதாட்ட புக்கி என சந்தேகிக்கப்படும் ஒரு மர்ம நபர் சந்தித்தது உண்மைதான் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.இது நடந்தது சில ஆண்டுகளுக்கு முன்பு. இருப்பினும், தன்னை வந்து சந்தித்த மர்ம நபர் குறித்து அணி மேலாளரிடம் இர்பான் பதான் உடனடியாக தெரிவித்து விட்டார் என்றும் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.இந்த சர்ச்சை குறித்து இர்பான் பதான் கூறுகையில், கடந்த 2009-ம் ஆண்டு நான் பாகிஸ்தான் தொடரில் பங்கேற்றிருந்தேன். அப்போது நான் ஹோட்டலில் தங்கியிருந்தபோது சூதாட்ட புரோக்கர் ஒருவர் முதலில் 3 விலை உயர்ந்த பரிசு பொருட்களை அனுப்பினார். பின்னர் மேலும் 2 பரிசு பொருட்களை அனுப்பி வைத்தார். ஆனால் அவற்றை நான் ஏற்கவில்லை. இந்த விஷயத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் மூலம் ஐசிசியின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். சூதாட்டத்தில் எந்த வீரர் தொடர்பு கொண்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய விவகாரம் வெளிவந்த பிறகு ஐசிசி இதன் மீது எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டும்படியாக உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற குற்றங்களில் ஒரு சில வீரர்கள் மட்டுமே ஈடுபடுகிறார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். இவர்களால் கிரிக்கெட்டுக்கே கெட்ட பெயர் ஏற்படுகிறது. ஆனாலும் கிரிக்கெட் போட்டிக்கு பாதிப்பு ஏற்படாது என கருதுகிறேன் என்றார்.