டர்பன்: டர்பனில் நடந்த சாம்பியன்ஸ் லீக் டுவென்டி 20 தொடரின் அரை இறுதிப் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அஏணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டி தலா 17 ஓவர்களைக் கொண்டதாக மாற்றி ஆடப்பட்டது. போட்டி தொடங்குவதற்கு முன்பு கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் மழை காரணமாக போட்டி தொடங்கவில்லை.
பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் முதலில் ஆடியது சென்னை சூப்பர் கிங்ஸ். அந்த அணியின் சுரேஷ் ரெய்னா ரசிகர்களுக்கு பெரும் ரன் விருந்தளித்தார். விளையாடுவது சுரேஷ் 'ரெய்னாவா' அல்லது ரன் 'ரெய்னா'? என்று ரசிகர்கள் குழம்பிப் போகும் அளவுக்கு பிரமாதமாக ஆடினார் ரெய்னா.
94 ரன்களைக் குவித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய் 41 ரன்களைக் குவித்தார். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட்களை இழந்து 174 ரன்களைக் குவித்து விட்டது.
பின்னர் ஆட வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 16.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 123 ரன்களில் சுருண்டு போனது. அந்த அணியில் மனீஷ் பாண்டே மற்றும் சிறப்பாக ஆடி 52 ரன்களைக் குவித்தார். சென்னை பவுலர்கள் போலிங்கர் 3 விக்கெட்களையும், முரளிதரன் 2 விக்கெட்களையும் அள்ளினர்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.