உலகக்கோப்பையை ‘தம்பி’ பிலிப் ஹியூக்ஸ்க்கு சமர்ப்பித்த கிளார்க்!
மெல்போர்ன்: பந்து தாக்கி பலியான ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ்-க்கு உலகக்கோப்பையை அர்ப்பணிப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் அணி கேப்டன் கிளார்க் தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றுள்ளது ஆஸ்திரேலியா. இதன்மூலம் உலகக்கோப்பையை 5வது முறையாக ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் இந்த வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் கிளார்க் 72 பந்தில் 74 ரன்கள் அடித்ததும் ஒரு முக்கியக் காரணம் ஆகும்.

இந்த வெற்றி தொடர்பாக போட்டிக்குப் பின்னர் கிளார்க் கூறுகையில், 'சிட்னியில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் பந்து தாக்கி எனது நண்பர் பிலிப்ஸ் ஹயூக்ஸ் இறந்தார். இந்த உலகக்கோப்பையை அவருக்கு அர்ப்பணிக்கிறேன். உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணியில் 15 பேர் இடம் பெற்றிருந்தனர். ஆனால், ஹியூக்ஸ் உடன் 16 பேர் என்று நான் நினைத்துக்கொள்வேன். ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடும் வரை நான் கருப்பு கயிறு அணிவேன்'' என்றார்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் தலையில் பந்து தாக்கியதில் உயிரிழந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸும், கிளார்க்கும் நீண்ட கால நண்பர்கள் ஆவர். ஹியூக்ஸை தனது தம்பி என்றே கிளார்க் கருதி வந்தார். ஹியூக்ஸின் இறுதிச் சடங்கின் போது அவரது வீட்டிலேயே கிளார்க் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹியூக்ஸ்க்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்றைய உலகக்கோப்பை இறுதி போட்டியிலும் கிளார்க் தனது இடது கையில் கருப்பு கயிறு கட்டியிருந்தார்.


Click it and Unblock the Notifications