லண்டன்: ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி மூன்று நாளைக்குள் முடிந்துவிடும் என்று கடுப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க். பிட்ச்சின் தன்மை பேட்டிங்கிற்கு முற்றிலும் எதிராக இருப்பதாக அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஆஷஸ் தொடரில் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி. 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்துவிட்டது. இந்நிலையில் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.

முன்னதாக பேட்டியளித்த ஆஸி. கேப்டனும், இந்த போட்டியோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப்போகும் சீனியர் வீரருமான மைக்கேல் கிளார்க், ஆஷசுக்காக இங்கிலாந்து தயார் செய்த பிட்சுகளை குறை கூறினார்.
கிளார்க் கூறியதாது: 5வது டெஸ்ட் போட்டிக்கு தயாரிக்கப்பட்ட பிட்சும், எஞ்சிய 4 போட்டிகளுக்கான பிட்ச் போன்றே காணப்படுகிறது. மூன்றாவது நாளுக்குள்ளேயே டெஸ்ட் போட்டி முடிவடைய அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் இம்முறை வெற்றி பெறும் அணியாக நாங்கள் இருப்போம் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய அணி தோற்கும் போதெல்லாம் பிட்சுகளை குறைசொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.