அடிலெய்ட்: முதுகுவலி காரணமாக இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க் விலகி விட்டார். இவர் இப்படி அடிக்கடி காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகுவது இது முதல் முறையல்ல.
கிளார்க் நீண்ட காலமாகவே முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் பல போட்டிகளில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கூடவே தசைப்பிடிப்பும் அவ்வப்போது அவரை வாட்டி வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்த கிளார்க், முதல் டெஸ்ட் போட்டியில் தடுமாறித் தடுமாறி, பிரேக் விட்டு விளையாடினார். அதேசமயம், சதம் அடித்தார். இந்த நிலையில் தற்போது தொடரிலிருந்தே அவர் விலகியுள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளின்போது அவர் பீல்டிங் செய்தபோது வேகமாக ஓடியபோது வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் நடக்க முடியாமல் தவித்தார் கிளார்க். உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேறிய அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தனர். இந்த நிலையில்தான் அவர் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகும் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கிளார்க் கூறுகையில், காயத்தன்மை குறித்து டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து ஆராய்ந்து வருகிறார்கள். குணமடைய எவ்வளவு நாட்கள் ஆகும் என்பது எனக்கு துல்லியமாக தெரியவில்லை. எனது நினைப்பு எல்லாம் உலக கோப்பை கிரிக்கெட் பற்றியே இருக்கிறது. உலக கோப்பையை யொட்டி முதலாவது பயிற்சி ஆட்டத்திற்கு இன்னும் 8 வாரங்களே உள்ளன. உலக கோப்பை மட்டுமின்றி, அதற்கு முன்பாக நடக்க உள்ள முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் (இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா) பங்கேற்க விரும்புகிறேன். ஆனால் அடுத்து என்ன செய்வது? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
காயங்களால், உலக கோப்பையில் விளையாட முடியாமல் போவதற்கு வாய்ப்பு உண்டு என்பதை மறுக்க முடியாது. அது மட்டுமின்றி இனி ஒரு போதும் கிரிக்கெட் விளையாட முடியாமல் கூட போகலாம் என்றார் அவர்.
கிளார்க் விலகியுள்ளதால் பிராட் ஹாடின் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது.