புனே: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் புனே அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைப்பெற்று வருகிறது. தற்போது லீக் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதின.

டாசில் வென்ற புனே அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 15.5 ஓவரில் 73 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனைத் தொடர்ந்து 74 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய புனே அணிக்கு திரிபாதி 20 பந்தில் 28 ரன்கள் என அதிரடி காட்டி அவுட்டாக, மறுமுனையில் ரஹானே 34 ரன்கள், ஸ்மித் 15 ரன்கள் எடுத்து அசத்தினர். இதனால் 12 ஓவரில் 78 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது புனே.
14 போட்டியில் 9 வெற்றிகளை பெற்றதன் மூலம் 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது புனே அணி.