15 வயதில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த வைபவ் சூர்யவன்ஷி:ஜாம்பவான் கிளைவ் லாயிட் அறிவுரை!
மும்பை: உலக கிரிக்கெட்டில் 15 வயதே ஆன இளம் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அசுர வளர்ச்சி, கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிடின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அண்மைக் காலத்தில் தான் கண்ட மிகச்சிறந்த இளம் திறமைகளில் வைபவ்வும் ஒருவர் என்று லாயிட் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
1975 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அடுத்தடுத்து உலகக் கோப்பைகளை வென்று தந்த கிளைவ் லாயிட், வைபவ் சூர்யவன்ஷியின் அச்சமற்ற ஆட்ட முறையைக் கண்டு வியந்துள்ளார். வைபவ் குறித்துப் பேசிய அவர், "அவர் மிகவும் உற்சாகமளிக்கக்கூடிய ஒரு வீரர். மிக எளிதாக பந்தை சிக்சர்களுக்குப் பறக்கவிடுகிறார். அவர் ஏனோ தானோ என்று பேட்டை சுழற்றுபவர் அல்ல, பந்தை மிக நேர்த்தியாக அடிக்கிறார்.

பயிற்சியாளர்கள் அவரது ஆட்டமுறையை மாற்ற முயற்சித்து, அவரது இயல்பான ஆட்டத்தைக் கெடுத்துவிடக் கூடாது என நம்புகிறேன். அவரை நாம் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து களத்தில் பார்க்கப் போகிறோம் என்பது மட்டும் நிச்சயம்" என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை ஏ அணிக்கு எதிரான முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 11 பந்துகளில் அரைசதம் கடந்து, லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இப்போட்டியில் 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்த அவரது அதிரடி ஆட்டம், இந்தியா ஏ அணி எளிதாக சாம்பியன் பட்டம் வெல்ல உதவியது.
சர்ச்சையும் கிளைவ் லாயிடின் அறிவுரையும்
இந்த முத்தரப்பு தொடரின்போது மைதானத்தில் ஏற்பட்ட ஒரு மோதல் சம்பவத்தில் வைபவ் சூர்யவன்ஷி விவாதத்திற்குள்ளானார். இதுகுறித்து கருத்து தெரிவித்த லாயிட், "மைதானத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது போட்டி நடுவர்கள் (Referees) தலையிட வேண்டும். ஸ்லெட்ஜிங் எனப்படும் வம்பிலுக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அவர்கள் அபராதம் விதிக்க வேண்டும். விதிகள் தெளிவாக இருக்கும்போது, இந்த இளம் வீரர் எதிரணி வீரருடன் நேரடியாக மோதலில் ஈடுபடுவதற்கு பதிலாக, நடுவரிடம் புகார் அளித்திருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.
அன்றைய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டிருந்தால்?
மைக்கேல் ஹோல்டிங், ஜோயல் கார்னர், ஆண்டி ராபர்ட்ஸ் மற்றும் கொலின் கிராஃப்ட் போன்ற தனது காலத்து அசாத்திய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக வைபவ் விளையாடியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த லாயிட், "நிச்சயமாக அது அவருக்கு ஒரு சிறந்த கடுமையான சோதனையாக இருந்திருக்கும். அவருடைய மன வலிமை மற்றும் திறமைக்கு சவாலாக அமைந்திருக்கும். அவரிடம் சிறந்த பார்வைத்திறனும், பந்தை அபாரமாக அடிக்கும் திறனும் உள்ளது.
எனவே, அது அவருக்கும் எங்கள் பந்துவீச்சாளர்களுக்கும் இடையே ஒரு சுவாரசியமான போட்டியாக இருந்திருக்கும்" என்று சிரித்தபடி கூறினார்.இறுதியாக, இந்த இளம் வீரரின் இயல்பான ஆட்ட பாணியில் யாரும் தலையிடக் கூடாது என்று மீண்டும் வலியுறுத்திய லாயிட், வைபவ் இதே பாணியில் தொடர்ந்து விளையாடினால், கிரிக்கெட் உலகம் நீண்ட காலத்திற்கு ஒரு சிறந்த வீரரின் ஆட்டத்தைக் காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications

