அதை இப்ப சொல்ல முடியாது..? யாருக்கு தெரியும் என்ன நடக்கும்னு..? முன்னாள் கேப்டனின் சஸ்பென்ஸ்
கேன்பரா: வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் யார் வெற்றி பெறுவார் என்று இப்போது கூற முடியாது என்று முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் தெரிவித்து உள்ளார்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடர் ஆஷஸ் தொடர். அந்த தொடரை வெல்வதை இரண்டு அணிகளுக்கும் கவுரவ பிரச்சனையாகும்.
2010-11ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதற்கு முன் 2001ல் ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் மண்ணில் தொடரை 4-1 என கைப்பற்றியது. அதன்பின் பெரும்பாலும் இரண்டு அணிகளில் சொந்த மைதானத்தில்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

கை கொடுக்கும் அனுபவம்
2001ல் இங்கிலாந்து மைதானத்தில் தொடரை வென்றதால் அனுபவம் கை கொடும் என்று எண்ணி, ஸ்டீவ் வாக்கை ஆலோசகராக நியமித்துள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு. இந்நிலையில் இரு அணிகளுக்கும் சமமான வாய்ப்பு உள்ளது. இந்த அணிதான்வெல்லும் என்று கணிக்க முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

6 வாரம், 5 போட்டிகள்
இது குறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில், 6 வாரத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்களும் அசத்துவார்கள். தொடர் முழுவதும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள்.

காயத்தால் பாதிப்பு
தற்போது இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் காயம் அடைந்திருப்பது இரு அணிகளுக்கும் கட்டாயம் பாதிப்பை ஏற்படுத்தும்.

தெரியவில்லை
உண்மையிலேயே நான் ஒரு பெட் கட்டும் மனநிலையில் இருப்பவராக இருந்தால் கூட, ஒரு அணிக்கு சாதகமாக கூற முடியாது. ஏனென்றால், யார் இதில் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதே தெரியவில்லை. இரு அணிகளும் சம பலத்தில் உள்ளது. ஆக மொத்தத்தில் இந்த முறை, மிக சிறந்த டெஸ்ட் தொடராக அமைய போகிறது என்றார்.


Click it and Unblock the Notifications