ஹைதராபாத்: சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்சை வீழ்த்தி அரை இறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
லீக் ஆட்டங்களில் சென்னை மற்றும் லாகூர் அணிகளை வீழ்த்தியிருந்த கொல்கத்தா, நேற்றிரவு ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை சந்தித்தது. டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. பின்னர் பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் கம்பீர் 2 ரன்களிலும், கல்லீஸ் 6 ரன்களிலும், உத்தப்பா 23 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற அணி தடுமாறியது.
ஆனால் வழக்கம்போலவே பதுங்கி பாய்ந்தது கொல்கத்தா அணி. ஆம். சென்னை அணிக்கு எதிராக ஆட்டத்தில் லோவர் மிடில் ஆர்டர் கைகொடுத்தது என்றால் இம்முறை மிடில் ஆர்டர் கொல்கத்தாவுக்கு கைகொடுத்தது. அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் அபாரமாக ஆடி 4 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தார். அந்த அணி 19.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி வாகை சூடியது. அனைத்து போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கும் முதல் அணியாக தேர்வாகிவிட்டது. டி20 ஓவர் கிரிக்கெட்டில் அந்த அணி தொடர்ச்சியாக பெறும் 12வது வெற்றி இதுவாகும்.