
ஸ்விங் ஆன பந்து
சென்னை அணி எடுத்தது ஓரளவுக்கு நல்ல ஸ்கோர் என்றாலும், மெத்தனமாக விடக்கூடிய ஸ்கோர் இல்லை என்பதை டோணி உணர்ந்திருந்தார். எனவே பந்தை நன்கு ஸ்விங் செய்யக்கூடிய ஆஷிஷ் நெஹ்ராவையும், ஈஸ்வர் பாண்டேவையும் துவக்கத்தில் பந்து வீச செய்வது என்று டோணி திட்டமிட்டிருந்தார்.

நெஹ்ரா பந்து வீச்சில் விக்கெட்டுகள்
முதல் ஓவரை நெஹ்ரா வீசிய நிலையில், இரண்டாவது ஓவரை ஈஸ்வர் பாண்டே வீசினார். எதிர்பார்த்தபடியே இருவரது பந்து வீச்சும் நன்கு ஸ்விங் ஆனது. மூன்றாவது ஓவரை மீண்டும் நெஹ்ரா வீசியபோது அடுத்தடுத்த பந்துகளில் கொல்கத்தா கேப்டன் கம்பீர் மற்றும் இளம் வீரர் மனிஷ் பாண்டே ஆகியோர் விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். இதனால் ஆட்டத்தின் போக்கு சென்னைக்கு சாதகமாக திரும்பியது.

பந்து வீச்சாளர்களுக்குள் குழப்பம்
இதையடுத்து நான்காவது ஓவர் வீசப்பட வேண்டும். டோணியும் விக்கெட் கீப்பிங் செய்யும் இடத்தில் சென்று நின்றார். பேட்ஸ்மேனும் பந்து வீச்சை எதிர்கொள்ள ஆயத்தமாக நின்று கொண்டிருந்தார். ஆனால் பந்துடன் ஓடி வந்தது ஈஸ்வர் பாண்டே கிடையாது, மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான மோகித் ஷர்மா. இதை பார்த்து டோணி உண்மையிலேயே அதிர்ச்சியடைந்துவிட்டார். ஓடி வந்து கொண்டிருந்த மோகித் ஷர்மாவை, கையை காண்பித்து தடுத்து நிறுத்தினார். பந்தை ஈஸ்வர் பாண்டேவிடம் தருமாறு கூறினார்.

அம்பையர் தலையீடு
கேப்டன் கட்டளையை ஏற்று, பந்தை ஈஸ்வர் பாண்டே வாங்கிக் கொண்டு ஓடிவர முற்பட்டார். ஆனால் இதைப்பார்த்த கள நடுவர் குமார் தர்மசேனா, விதிமுறைப்படி ரன்-அப் எடுத்த பிறகு அதே பவுலர்தான் பந்தை வீச வேண்டும் என்று டோணியிடம் தெரிவித்தார். அம்பையர் கருத்தை மீற முடியாதே என்ற ஆதங்கத்தில் வேண்டா வெறுப்பாக பந்தை மோகித் வீச அனுமதித்தார் டோணி.

தப்பித்தார் மோகித் ஷர்மா
மோகித் பந்து வீச ஓடிவரும்போது, எரிச்சலுடன் தலையை இடதுபுறமும், வலதுபுறமும் ஆட்டியபடி முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தபடி நின்றிருந்தார் டோணி. 'இந்த ஓவரில் ரன்னை விட்டுக் கொடுக்காமல் இருந்தால்தான் டோணியின் கோபத்தில் இருந்து மோகித் தப்பிப்பார்' என்று கமென்ட் அடித்து டிவி வர்ணனையாளர்கள் ஒரு பக்கம் டென்ஷன் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. மோகித் வீசிய முதல் பந்திலேயே கொல்கத்தாவின் அதிரடி வீரர் யூசுப் பதான் அவுட் ஆனார். 'அவுட் ஸ்விங்' ஆன மோகித் ஷர்மாவின் பந்து, யூசுப்பின் பேட்டில் பட்டு ஸ்லிப்பில் நின்ற டு பிளெசிஸ் கைகளில் தஞ்சம் அடைந்தது.

தர்ம சங்கடத்தில் டோணி
வேண்டா வெறுப்பாக பெற்ற பிள்ளைக்கு காண்டாமிருகம் என்று பெயர் வைக்கும் மனநிலைக்கு டோணி சென்றுவிட்டார். டோணியால் இந்த விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடுவோமா, வேண்டாமா என்று முடிவெடுக்க முடியாத நிலை. எனவே தர்ம சங்கடத்தில் திருதிருவென விழித்தார். ஆனால் மோகித்துக்கு அப்போதுதான் உயிரே வந்தது. அவரது முகத்தில் அப்படியொரு சந்தோஷம். விக்கெட்டை வீழ்த்தக் கூடிய பந்து வீச்சாளரை ஒவ்வொரு அணியிலும் கேப்டன்தான் தேர்வு செய்வார், இந்த போட்டியில் அம்பையர் தேர்வு செய்துவிட்டார் என்று டிவி வர்ணனையாளர்கள் அவர்கள் பங்குக்கு கடுப்பேற்றினர்.


Click it and Unblock the Notifications