சிகாகோ : பிரபல தொழில்முறை ரெஸ்லிங் வீரரான சிஎம் பங்க் சுமார் 9 ஆண்டுகள் கழித்து WWE-க்கு திரும்பி இருக்கிறார்.
WWE சர்வைவர் சீரிஸ் என்ற சிறப்பு ரெஸ்லிங் நிகழ்ச்சி சிகாகோவில் நடந்தது. சிஎம் பங்க்-கின் சொந்த ஊர் சிகாகோ என்பதால் அவர் இந்த நிகழ்ச்சியில் மீண்டும் WWE-க்கு திரும்புவார் என கூறப்பட்டது. அதே போல சிஎம் பங்க் மீண்டும் திரும்பினார்.
இதை அடுத்து WWE ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர். அவர் WWE அரங்கில் காலடி எடுத்து வைத்து அவர் இசை ஒலிக்கப்பட்டது முதல் சுமார் ஐந்து நிமிடத்துக்கு ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு அடங்காமல் விண்ணை முட்டியது. இணையத்தில் சிஎம் பங்க் ரசிகர்கள் அவர் வந்த காட்சிகளை பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு சிஎம் பங்க், WWE நிர்வாகத்துடன் சண்டை போட்டு வெளியேறினார். அதன் பின் நீண்ட காலம் ரெஸ்லிங் பக்கமே வரவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் WWE-இன் போட்டி நிறுவனமான AEW-க்கு சென்றார். அங்கே ஓராண்டு சிறப்பாக செயல்பட்ட அவர், அதன் பின் சக வீரர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பொதுவெளியில் அவர்களை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார். பின் அங்கிருந்து வெளியேறினார்.
அப்போதிருந்தே சிஎம் பங்க் மீண்டும் WWE-க்கு திரும்புவார் என கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் தன் சொந்த ஊரான சிகாகோவில் நடைபெற்ற "சர்வைவர் சீரிஸ் வார் கேம்ஸ்" என்ற நிகழ்ச்சியின் இடையே WWE அரங்கில் காலடி எடுத்து வைத்தார். அதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சிஎம் பங்க் இல்லாத போதும் சுமார் 9 ஆண்டுகளாக அவ்வப்போது சிஎம் பங்க் பெயரை WWE நிகழ்ச்சிகள் மோசமாக இருக்கும் போது எல்லாம் ரசிகர்கள் கோஷம் போட்டு கூறி இருக்கின்றனர். அந்த அளவுக்கு பொழுது போக்காக ரெஸ்லிங் நிகழ்ச்சியை கொண்டு செல்லக் கூடியவர் சிஎம் பங்க்.
அவர் மைக்கை எடுத்தாலே WWE நிர்வாகத்துக்கு பயம் வரும் அளவுக்கு அதிரடியாக பேசக் கூடியவர். ஒருமுறை ரெஸ்லிங் சாம்பியன்ஷிப் பெல்ட் வென்ற கையோடு அதை எடுத்துக் கொண்டு WWE-வை விட்டு வெளியேறி வேறு ரெஸ்லிங் நிறுவனத்துக்கு சென்று மிரள விட்டவர் என்பதால் WWE நிர்வாகத்துக்கு எப்போதுமே இவர் மீது பயம் உண்டு. இனி சிஎம் பங்க் மீண்டும் வந்துள்ள நிலையில் அவரது ரசிகர்கள் பலர் பல ஆண்டுகள் கழித்து WWE நிகழ்ச்சிகளை மீண்டும் பார்க்கத் துவங்குவார்கள் என கூறப்படுகிறது.