சென்னை: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள 3 பார்வையாளர் மாடங்களை இடித்துத் தள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உத்தரவிட்டுள்ளது. யாருக்கும் இடையூறு இல்லாமல் இடிக்கும் பணியை மேற்கொள்ளுமாறும் அது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குச் சொந்தமான எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் கடந்த 2011ம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியையொட்டி 3 புதிய காலரிகள் (ஐ, ஜே, கே) அமைக்கப்பட்டன. ஆனால் அவை முறைப்படி அனுமதி பெறாமலும், விதிமுறைகளுக்குப் புறம்பாகவும் கட்டப்பட்டதாக கூறி அவற்றைத் திறக்க அனுமதிக்க மறுத்து விட்டது சிஎம்டிஏ.

சிஎம்டிஏவின் அனுமதி இல்லாததால் இவற்றைப் பயன்படுத்த சென்னை மாநகராட்சியும் தடை விதித்து விட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தை அணுகியது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். விசாரணையின் இறுதியில் 3 கேலரிகளையும் இடித்துத் தள்ள உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
ஆனால் அதை இடிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது கிரிக்கெட் சங்கம். மேலும் இந்த கேலரிகளுக்கு அனுமதி பெறவும் அது தீவிரமாக முயற்சித்து வருகிறது. மாற்றியமைப்பதாகவும் அது கூறியிருந்தது. இந்த நிலையில் 3 கேலரிகளையும் இடித்துத் தள்ளுமாறு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு சிஎம்டிஏ உத்தரவிட்டுள்ளது. யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் கேலரிகளை இடிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அது உத்தரவில் கூறியுள்ளது.