டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நியமனத்தை தவிர பிற இரு பயிற்சியாளர்கள் நியமனத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது நிர்வாகிகள் கமிட்டி (சிஓஏ). இந்த கமிட்டி சுப்ரீம் கோர்ட்டால், பிசிசிஐ செயல்பாடுகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவாகும்.
இந்திய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியில் சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். சமீபத்தில் இந்த கமிட்டி, தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியையும், பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கானையும், வெளிநாடு சுற்றுப் பயணங்களுக்கான பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட்டையும் நியமித்தது.
ஆனால் பந்து வீச்சு பயிற்சியாளர் விவகாரத்தில் சாஸ்திரிக்கு உடன்பாடு இல்லை என ஊடகங்களில் செய்தி வெளியானது. இதை மறுத்துள்ள ஆலோசனை கமிட்டி, இந்த செய்திகளால் தங்கள் நற்பெயர் கெடுவதாகவும், சாஸ்திரியுடன் ஆலோசித்தே முடிவு எடுக்கப்பட்டதாகவும், நிர்வாகிகள் கமிட்டிக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த விவகாரத்தின் உண்மைகளை நிர்வாகிகள் கமிட்டி வெளியே சொல்ல வேண்டும் என்றும், கங்குலி உள்ளிட்டோர் அடங்கிய ஆலோசனை கமிட்டி கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த கோரிக்கையைதொடர்ந்தே, ஜாகீர்கான், ராகுல் டிராவிட்டின் நியமனம் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சாஸ்திரி நியமனத்திற்கு நிர்வாகிகள் கமிட்டி ஒப்புதல் வழங்கியுள்ளது.