2025 ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்து பல்வேறு சாதனைகளை முறியடித்த நிலையில், அவரது பயிற்சியாளர் மணிஷ் ஓஜா அவரது ஆட்டம் குறித்தும், பத்து வயதிலேயே அவர் நீளமான சிக்ஸர்களை அடித்து மிரள வைத்தது பற்றியும் பேசி இருக்கிறார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரராக இறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்தார். அவரது ஆட்டத்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் அடங்கும். இதில் சில சிக்ஸர்கள் மைதானத்தின் மேற்கூரைக்குச் சென்றன.

சில சிக்ஸர்கள் 90 மீட்டருக்கும் அதிகமாகச் சென்றன. மூன்று சிக்ஸர்கள் 85 மீட்டர் தூரத்துக்குச் சென்றன. எப்படி வைபவ் சூர்யவன்ஷியால் இத்தனை இளம் வயதில் மிக நீளமான சிக்ஸர்களை அடிக்க முடிகிறது என்ற வியப்பு பலருக்கும் எழுந்தது.
அது குறித்து வைபவ் சூர்யவன்ஷியின் பயிற்சியாளர் மணிஷ் ஓஜா பேசினார். "நான் 2018ல் தான் அவரை முதலில் பார்த்தேன். அவரும் அவரது தந்தையும் முதல் நாள் எனது பயிற்சி மையத்திற்கு வந்தபோது நான் அங்கு இல்லை. அதனால் நான் அவர்களை நேரில் சந்திக்கவில்லை. ஒரு வாரத்திற்கு பிறகு அவர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். எனது மொபைல் எண்ணை வாங்கிக்கொண்டு வந்து சந்தித்தார்கள்".
"2022 ஆம் ஆண்டு எங்கள் பயிற்சி மையத்தில் நான் ஒரு போட்டியை நடத்தினேன். பீகார் மாநில அளவிலான அண்டர் 19 வீரர்களுடன் எங்கள் பயிற்சி மையத்தை சேர்ந்த வீரர்கள் விளையாடினார்கள். 10 வயதான வைபவ் சூர்யவன்ஷி அந்தப் போட்டியில் 118 ரன்கள் சேர்த்தார். இப்போது நீங்கள் பார்க்கும் சிக்ஸர்களை அவர் அப்போதே அடித்தார்."
"அப்போது 60 முதல் 65 மீட்டர் தூர பவுண்டரி எல்லையைத் தாண்டி 20 அல்லது 30 அடிகள் வரை வந்து சென்றன. அவர் அடித்த வேகம், நேரம் மற்றும் துல்லியம் எல்லாமே அற்புதமாக இருந்தது. அப்போதே இந்த சிறுவன் அசாதாரணமானவன் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்." என்றார்.
எப்படி 14 வயதில் அவருக்கு இத்தனை சக்தி கிடைக்கிறது என கேட்டபோது மணிஷ் ஓஜா விவரித்தார். "இது சாத்தியம்தான். அதிரடியாக அடிப்பதற்கு தன்னம்பிக்கை தான் முதலில் முக்கியம். உங்களது வசதிக்குள் நீங்கள் ஆட வேண்டும். நான் இளம் வயதிலேயே அவருக்கு அதிக புல்டாஸ் பந்துகளை வீசச் செய்வேன்."
"அவர் சிறுவயதில் இருந்த போது, ரோபோட் மூலம் அதிவேகத்தில் பந்து வீசப்படும். அப்போது பந்து அதிக அளவில் பவுன்ஸ் ஆகும். எனவே அவருக்கு புல்டாஸ் பந்துகளை வீசச் செய்து அவரது பேட்டிங்கின் நேரம் மற்றும் உத்திகளை மேம்படுத்த முயன்றேன். பேட்டை எப்போதும் உயரமாக வைத்துக் கொள் என்று சொல்வேன். மேலும், பந்து வரும் கோட்டிலேயே சென்று பந்தை அதிக சக்தியுடன் அடிக்க வேண்டும் என்று சொல்வேன்."
"நாங்கள் ஒவ்வொரு ஷாட்டையும் பயிற்சி செய்திருக்கிறோம். அவருடைய பேக் லிஃப்ட் மற்றும் கை அகலமாக செல்வதை பாருங்கள். அபிஷேக் ஷர்மா மற்றும் யுவராஜ் சிங் அதுபோல அடிப்பார்கள். அதற்காகவே அவருக்கு நான் பயிற்சி அளித்தேன். அந்த பயிற்சி அவருக்கு அதிக நேரம் மற்றும் பந்தை அடிப்பதற்கான அதிக சக்தியை அளிக்கிறது."
"'மிக இளம் வயதிலேயே அவர் ஒரு நாளைக்கு 350 முதல் 400 பந்துகளை சந்திப்பார். அடிப்படை பேட்டிங் பயிற்சியான ஃப்ரண்ட் ஃபுட் டிரைவ், லாஃப்டட் ஷாட், ஸ்டெப் அவுட் டிரைவ், கட் ஷாட், புல் ஷாட் என அனைத்தையும் பயிற்சி செய்ய சொல்வேன். அதன் பிறகு, ரோபோட் மூலம் குறிப்பிட்ட இடத்தை குறிவைத்து பந்து வீசப்படும். இவ்வாறு பல்வேறு பயிற்சிகளை அவர் தினமும் மேற்கொள்வார்" என்றார் மணிஷ் ஓஜா.