தர்மசாலா: இந்தியா-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடரில் புதுவகை 'டாஸ்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டாசில், மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா ஆகிய இரு தலைவர்கள் படங்களும் இடம் பெற்றுள்ளது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 டி20, ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் ஆட உள்ளது.

இத்தொடருக்கு, மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா தொடர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அக். 2ம் தேதியான இன்று, டி20 போட்டியுடன் தொடர் ஆரம்பிக்கிறது.
இன்று, தேசப்பிதா, மகாத்மா காந்தியின் 146வது பிறந்த தினமாகும். எனவே இதை சிறப்பிக்கும் வகையில், இந்த தொடருக்கான டாஸ், மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா உருவத்துடன் பொறிக்கப்பட்டுள்ளது.
நாணயத்தின் ஒரு பகுதியில் காந்தி மற்றும் மண்டேலா உருவங்களும், மற்றொருபுறம், ஃப்ரீடம் சீரிஸ் என்ற வாக்கியமும் இருக்கும். இதில் காந்தி, மண்டேலா உருவங்கள் இருக்கும் பகுதி டாசின் 'ஹெட்' எனவும், அடுத்த பகுதி டெயில் என்றும் அழைக்கப்படும்.
இத்தொடர் முழுமைக்கும், இந்த நாணயம் பயன்படுத்தப்படுகிறது. இது 20 கிராம் தங்கத்தால் முலாம் பூசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.