லண்டன்: மைதானத்தில் தகராறு செய்யும் கிரிக்கெட் வீரர்களுக்கு, ரெட் கார்டு கொடுக்கும் வகையிலான நடைமுறையை இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் கிளப் ஒன்று அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சர்வதேச போட்டிகளிலும் இதுபோன்ற நடைமுறை கொண்டுவரப்படுவதற்கு, இந்த கிளப்பின் நடவடிக்கை பிள்ளையார் சுழி போட வாய்ப்புள்ளது.
கால் பந்தாட்டத்தின்போது தகராறு செய்யும் வீரர்களுக்கு, நடுவர்கள், எல்லோ அல்லது ரெட் கார்டு கார்டு காட்டுவது வழக்கம். மஞ்சள் அட்டை காண்பிப்பது எச்சரிக்கையை குறிக்கும். ஆனால், சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டால் உடனடியாக மைதானத்தை விட்டே அந்த வீரர் வெளியேறியாக வேண்டும்.
இதேபோன்ற மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டை நடைமுறையை, கிரிக்கெட்டில் புகுத்த உள்ளது இங்கிலாந்தின் மேரிலெபோன் கிரிக்கெட் கிளப். அவ்வப்போது மைதானத்தில் வீரர்கள் பெரும் மோதலில் ஈடுபடுவது தொடர் கதையாவதால் சில போட்டிகளை அந்த கிளப் பாதியில் நிறுத்த வேண்டியதாக வந்ததாம். எனவே, எல்லோ, ரெட் கார்டுகளை விரைவில் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் செய்ய உள்ளது அந்த கிளப்.
வருங்காலங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுபோன்ற, நடைமுறை கொண்டுவரப்பட இங்கிலாந்து கிளப்பின் நடவடிக்கை பிள்ளையார் சுழி போட வாய்ப்புள்ளது என்கிறார்கள் கிரிக்கெட் பார்வையாளர்கள்.