காமன்வெல்த்தில் சத்தீஸ்கர் வீராங்கனை ஞானேஸ்வரி யாதவ் அபாரம்.. இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி
கிளாஸ்கோ: கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 53 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை ஞானேஸ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தனது முதல் காமன்வெல்த் தொடரிலேயே அவர் இந்தச் சாதனையைப் படைத்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். இவர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
திங்கட்கிழமை (ஜூலை 27) நடைபெற்ற இந்தப் போட்டியில், ஞானேஸ்வரி யாதவ் ஒட்டுமொத்தமாக 199 கிலோ எடையைத் தூக்கித் தனது புதிய தனிநபர் சாதனையைப் பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். நைஜீரியாவின் ஆப்பிரிக்க சாம்பியனான ஓனோம் திதிஹ், ஸ்னாட்ச் பிரிவில் 93 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 113 கிலோவும் என ஒட்டுமொத்தமாக 206 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன்வெல்த் சாதனையுடன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

நைஜீரிய வீராங்கனைக்குக் கடைசி வரை கடும் சவால் கொடுத்த ஞானேஸ்வரி யாதவ், ஒரு கட்டத்தில் புதிய காமன்வெல்த் சாதனையையும் நிகழ்த்தினார். ஆனால், ஓனோம் திதிஹ் தனது இறுதி முயற்சியில் அதனை முறியடித்தார். முன்னதாக, நடப்பு ஆண்டில் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் 194 கிலோ எடையை உயர்த்தி வெண்கலமும், யுனிவர்சல் பளுதூக்குதல் கோப்பையில் தங்கப் பதக்கமும் வென்று ஞானேஸ்வரி யாதவ் அசத்தியிருந்தார். மேலும், 2024 உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பிலும் அவர் 5வது இடத்தைப் பிடித்திருந்தார்.
இந்த வெள்ளிப் பதக்கத்துடன் 2026 காமன்வெல்த் தொடரில் இந்தியா 5 பதக்கங்களை வென்றுள்ளது. ஒரு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தற்போது எட்டாவது இடத்தில் உள்ளது. இதில் பளுதூக்குதல் பிரிவில் மீராபாய் சானு தங்கம் வென்று இருந்தார். மேலும், அதே பிரிவில் மூன்று வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் ஒரு வெண்கலம் கிடைத்தது.


Click it and Unblock the Notifications