காமன்வெல்த் விளையாட்டு 2026: 2 இந்திய வீராங்கனைகளுக்கு கிடைத்த மாபெரும் கவுரவம்
கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் உள்ள ஓவிஓ ஹைட்ரோ மைதானத்தில் ஜூலை 23 அன்று நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில், இந்தியாவின் சார்பில் கொடி மற்றும் செங்கோலை ஏந்திச் செல்லும் பெருமையை பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் ஆகியோர் பெறுகின்றனர்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில், இறுதி செங்கோல் ஏந்துபவர் மன்னரின் செங்கோலை மன்னரிடமோ அல்லது அவரது பிரதிநிதியிடமோ ஒப்படைப்பார். அதன் பிறகு, அவர் அதிலுள்ள செய்தியை உரக்கப் படித்து போட்டிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைப்பார். ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்திற்கு இணையாக இந்த காமன்வெல்த் செங்கோல் தொடர் ஓட்டம் கருதப்படுகிறது.

இந்த நியமனங்களை உறுதிசெய்து பேசிய இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா, "ஓவிஓ ஹைட்ரோ அரங்கில் மீராபாய் மற்றும் லவ்லினா ஆகியோர் இந்திய அணியை வழிநடத்துவது பெருமைக்குரிய விஷயமாகும். இரண்டு பெண் வீராங்கனைகள் தொடக்க விழாவில் இந்திய அணியை வழிநடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்த அணிக்கும் ஒரு புதிய உத்வேகத்தைத் தரும். இருவருக்கும் மற்றும் ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பி.டி. உஷா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
"மீராபாய் மற்றும் லவ்லினா இருவரும் சர்வதேச அரங்கில் தொடர்ந்து தங்களது திறமையை நிரூபித்து வந்துள்ளனர். தற்போது அவர்கள் இங்கிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றும் உஷா தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 8 அன்று தனது 32-வது பிறந்தநாளைக் கொண்டாடும் மீராபாய் சானு, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் முன்னணி பளுதூக்குதல் வீராங்கனையாக விளங்கி வருகிறார்.
அவர் 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கமும், 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.இதேபோல், லவ்லினா போர்கோஹெய்ன் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தையும், 2023 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார். மேலும் அவர் 2023 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதனால் கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் வலுவான பதக்க எதிர்பார்ப்புகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா, போட்டியை நடத்தும் நாட்டின் தேசியக் கொடியேற்றத்துடனும், அந்நாட்டின் தேசிய கீதத்துடனும் தொடங்கும். மேலும் காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் கொடி, முந்தைய காமன்வெல்த் போட்டியை நடத்திய நாடு மற்றும் அடுத்த போட்டியை நடத்தவுள்ள நாட்டின் கொடிகளும் விழாவின் போது ஏற்றப்படும்.


Click it and Unblock the Notifications

