ஐபிஎல் தொடர் எப்படி இருந்துச்சு தெரியுமா.. ஆஷஸ் தொடர்லாம் சாதாரணம்.. இங்கி. வீரர் ஹாரி ப்ரூக் பேட்டி
லண்டன்: ஐபிஎல் தொடருடன் ஒப்பிடும் போது ஆஷஸ் தொடரால் ஏற்பட்ட அழுத்தம் மிகவும் குறைவானது என்று இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் நாளிலேயே 283 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இங்கிலாந்து அணியில் இளம் வீரர் ஹாரி ப்ரூக் 85 ரன்கள் விளாசி அசத்தினார்.

இந்தப் போட்டி மட்டுமல்லாமல் ஆஷஸ் தொடரின் 3வது போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிபெறுவதற்கு ஹாரி ப்ரூக் முக்கிய காரணமாக அமைந்தார். நடப்பு ஆஷஸ் தொடரில் மட்டும் 8 இன்னிங்ஸ்களில் 4 அரைசதங்கள் உட்பட 356 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். இவரை கட்டுப்படுத்த முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறி வருகின்றனர்.
ஆனால் இதே ஹாரி ப்ரூக், சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐதராபாத் அணி சார்பாக ரூ.13.25 கோடிக்கு வாங்கப்பட்ட ஹாரி ப்ரூக், ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடி வெறும் 190 ரன்களை மட்டுமே சேர்த்தார். ஒரேயொரு சதத்தை மட்டும் விளாசிய பின் ஹாரி ப்ரூக் பேசிய பேச்சும் ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஹாரி ப்ரூக் மீண்டும் தனது ஃபார்மை மீட்டெடுத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய நாளின் ஆட்டத்திற்கு பின் இங்கிலாந்து அணி தரப்பில் ஹாரி ப்ரூக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் தரப்பில், ஆஷஸ் கிரிக்கெட் தொடர் உங்களை உடல் மற்றும் மனதளவில் மிகவும் சோர்வடைய வைத்த தொடராக அமைந்துவிட்டதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஹாரி ப்ரூக், ஆஷஸ் தொடர் மனதளவிலும் உடல்ரீதியாகவும் சோர்வடைய வைத்துவிட்டது உண்மைதான். ஆனால் ஐபிஎல் தொடரை ஒப்பிட்டால், ஆஷஸ் தொடருக்கு இரண்டாம் இடம் தான். ஐபிஎல் தொடர் மனதளவிலும் உடலளவிலும் கடினமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். இவரது பதில் இந்திய ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications