
புகை மயம்
டெல்லியில் தற்போது மிகவும் மோசமான அளவிற்கு புகை நிலவி வருகிறது. இந்த புகை காரணமாக அங்கு கிரிக்கெட் விளையாடும் இலங்கை வீரர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இலங்கை வீரர்கள் அனைவரும் முகத்தை மாஸ்க்கால் மூடிக்கொண்டு விளையாடினார்கள். இலங்கை அணியின் வீரர்கள் நடுவரிடம் போட்டியை நிறுத்தும்படி அடிக்கடி சண்டையிட்டனர்.

வைரல் சர்ச்சை
தற்போது இலங்கை வீரர்களின் இந்த முறையீடு சர்ச்சை ஆகி இருக்கிறது. பலரும் சமூக வலைத்தளங்களில் இலங்கை அணியை கிண்டல் செய்து வருகின்றனர். கோஹ்லிக்கும் இந்திய அணியின் இமாலய இலக்கிற்கும் பயந்தே இலங்கை இப்படி செய்வதாக கூறினார்கள். மேலும் சிறப்பாக நடிக்கும் இலங்கை வீரர்கள் படத்திலும் நடிக்கலாம் என்று கூட கலாய்த்து இருந்தார்கள்.

கொழும்பு எப்படி இருக்கிறது
தற்போது சிலர் ஆதாரங்களுடன் இலங்கை தலைநகர் கொழும்பில் நிலவும் காற்று மாசு குறித்து தகவல் வெளியிட்டு இருக்கின்றனர். அதன்படி கொழும்பின் மொத்த பரப்பளவு 37.31 கிமீ மட்டுமே. டெல்லியின் பரப்பளவு 1,484 கிமீ ஆகும். இந்த சிறிய பரப்பளவு கொண்ட கொழும்பு மிகவும் அதிக அளவில் மாசு அடைந்து இருக்கிறது. கணக்குப்படி கொழும்பின் மாசு அளவு 64 புள்ளிகள் ஆகும். இது அந்த மிகச்சிறிய நகரத்திற்கு மிகவும் அதிகம் ஆகும்.

டெல்லியின் நிலை
அதேபோல் டெல்லியின் மாசுபட்டு அளவு குறித்தும் கூறப்பட்டு இருக்கிறது. அதில் 88.93 புள்ளிகள் பெற்று டெல்லி அதிகமாக மாசு அடைந்து இருக்கிறது. ஆனால் மிகச்சிறிய பரப்பளவு கொண்ட கொழும்புவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இது குறைவாகத்தான் இருக்கிறது. இதன் காரணமாக டெல்லியின் மாசும், கொழும்பின் மாசும் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

வைரலோ வைரல்
தற்போது இந்த புள்ளி விவரங்களை வைத்து மீண்டும் இலங்கை வீரர்களை இந்திய ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே மைதானத்தில் மோசமான சூழ்நிலை நிலவினால் கண்டிப்பாக விளையாட மாட்டோம் என்று இலங்கை தரப்பு கூறியிருக்கிறது. அதேபோல் இன்றும் மாஸ்க்குடன் இரண்டாவது இன்னிங்ஸ் பவுலிங் போட இலங்கை களம் இறங்கி இருக்கிறது. அவர்களின் இந்த செயல் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











