போர்ட் ஆப் ஸ்பெயின்: ஐசிசி தர வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது பெரிய மாற்றத்தை தராது என்றும் தொடர்ந்து சிறப்பாக ஆடுவதே அவசியம் என்றும் டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
இலங்கையிடம் ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்ததால் 112 புள்ளிகளுடன் உள்ள இந்திய அணி டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் பிடித்தது. இதுகுறித்து விராட் கோஹ்லி நிருபர்களிடம் கூறியதாவது:

முதலிடம் பிடித்ததை ஒரு பாராட்டு என்ற வகையில் ஏற்கலாம். ஆனால், அணியில் இது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. தொடர்ச்சியாக சிறப்பாக ஆடுவதே அணியின் நோக்கம். அவ்வாறுதான் ஆடி வருகிறோம்.
உலகின் தலை சிறந்த அணியாக வேண்டுமானால், 3-4 வருடங்களாவது தொடர்ச்சியாக சிறப்பாக ஆட வேண்டும்.
இந்திய அணி குறைந்த எண்ணிக்கையில்தான் டெஸ்ட் போட்டிகளில் ஆடிவருகிறது. எனவே இதைக்கொண்டு முழு திறமையையும் கணிக்க முடியாது. கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தபோது கூட, இந்தியா சில காலம் முதல் இடத்தை பிடித்தது. இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.
இந்தியா-மே.இ.தீவுகள் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.