ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் பந்துவீச்சின் போது வீசப்பட்ட இரு நோ-பால்கள் 3வது நடுவரால் வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 58வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனால் சொந்த மண்ணில் ஐதராபாத் அணி அடைந்த ஹாட்ரிக் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 183 ரன்களை இலக்காக லக்னோ அணி நிர்ணயித்துள்ளது.

இதனிடையே லக்னோ அணியின் பந்துவீச்சின் போது ஆவேஷ் கான் வீசிய நோல்-பால் 3வது நடுவரால் வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. 19வது ஓவரின் 3வது பந்தை ஆவேஷ் கான் கிளாஸனுக்கு எதிராக ஒரு பீமரை வீசினார். ஃபுல் டாஸ் வீசப்பட்ட அந்த பந்து, சரியாக இடுப்புக்கு மேலாக சென்றது. இதனை கள நடுவர் சரியான பந்தாக அங்கீகரித்தார்.
ஆனால் ஐதராபாத் அணியின் கிளாஸன் 3வது நடுவரிடம் மேல்முறையீடு செய்தார். அதில் மீண்டும் அந்த பந்தை நோ-பால் சோதனை செய்து பார்த்ததில், அப்பட்டமாக நோ-பால் என்று தெரிய வந்தது. ஆனால் மூன்றாவது நடுவர், அதனை நோ-பால் என்று அறிவிக்காமல், சரியான பந்து என்று அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கிளாஸன், கள நடுவரிடம் வாக்குவாதம் செய்தார்.

அதுமட்டுமல்லாமல் ஐதராபாத் அணியின் ரசிகர்களும் வெகுண்டெழுந்தனர். இதனால் லக்னோ அணியின் ஓய்வறையை நோக்கி விராட் கோலி, விராட் கோலி என்று கோஷம் எழுப்பினர். அதேபோல் சில ரசிகர்கள் நட்டுகள், போல்ட்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆட்டம் சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. அதேபோல் கடைசி ஓவரிலும் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் வீசப்பட்ட நோல்-பாலும் வழங்கப்படவில்லை. இதனால் 3வது நடுவரின் தீர்ப்பை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.