மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கை பிரிந்து ஒரு மாதம் கூட முழுமையாக முடிவடையாத சூழலில், புதிய காதலியான ஜாஸ்மின் வாலியாவுடன் கிரீஸ் நாட்டில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். இதனால் அவரின் சர்ச்சைகளின் பட்டியலை திரும்பி பார்க்கலாம்.
இந்திய அணியில் இடம்பிடித்து ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடிய போது, முதல்முறையாக காபி வித் கரண் நிகழ்ச்சியின் மூலம் சர்ச்சையில் சிக்கினார். அந்த நிகழ்ச்சியில், பெண்கள் குறித்து ஹர்திக் பாண்டியா கூறிய கருத்துகள் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிசிசிஐ-யால் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் அவருக்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டு, இந்தியாவுக்கு திரும்பி அழைக்கப்பட்டார்.

அதேபோல் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது குஜராத் அணிக்காக ஹர்திக் பாண்டியா மற்றும் முகமது ஷமி இருவரும் இணைந்து விளையாடினார். அதில் ஒருமுறை முகமது ஷமி ஃபீல்டிங்கில் செய்த தவறு காரணமாக, கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா சீனியர் வீரர் என்றும் பார்க்காமல் ஆக்ரோஷமாக கத்தினார். இது முகமது ஷமியால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதன்பின் ஹர்திக் பாண்டியா களத்திலேயே ஷமியிடம் சென்று மன்னிப்பு கேட்டதால், பிரச்சனை சுமூகமாக முடிவடைந்தது.
அதேபோல் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது மும்பை அணியின் ஜாம்பவானான ரோஹித் சர்மாவை திடீரென பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்ய அறிவுறுத்தினார். அப்போது ரோஹித் சர்மா, "நானா?" என்று கேள்வி கேட்க, அதற்கு ஹர்திக் பாண்டியா, நீங்கள் தான் என்று கைகை நீட்டி போக சொன்னார். அதுமட்டுமல்லாமல் ரோஹித் சர்மாவை வெறும் இம்பேக்ட் பிளேயராக மட்டும் விளையாட வைத்தும் ஹர்திக் பாண்டியா அவமானப்படுத்தினார்.

இதுமட்டுமல்லாமல் முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் உடன் காதலில் இருந்த ஹர்திக் பாண்டியா, திருமணத்திற்கு முன்பாகவே குழந்தையை பெற்றெடுக்க தயாரானார். இருப்பினும் குடும்பத்தினரின் அறிவுறுத்தலால், குழந்தை பிறக்க 2 மாதங்களுக்கு முன்பாக நடாஷா ஸ்டான்கோவிக்கை திருமணம் செய்து கொண்டார். ஹர்திக் பாண்டியாவின் திருமணம் முடிவடைந்த 2 மாதங்களில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நடாஷா ஸ்டான்கோவிக் உடனான பிரிவை முறையாக அறிவிப்பதற்கு முன்பாக புதிய காதலியான ஜாஸ்மின் வாலியாவுடன் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட பயணித்தார். அதேபோல் ஐபிஎல் தொடரின் போதே இவர்கள் இருவரும் காதலில் இருந்து வந்துள்ளதும், இன்ஸ்டாகிராம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.