துபாய்: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ட்விட்டர் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அந்த விளம்பரம் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை வைத்து சூதாட்டம் நடத்தும் செயலி ஒன்றிற்காக கம்பீரால் வெளியிடப்பட்டிருந்தது. அந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக கௌதம் கம்பீர் இருக்கும் நிலையில், அவரது சமூக வலைதள பக்கத்தில் இந்த விளம்பரம் வெளியானது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த விளம்பரத்தில், "ரோஹித் மற்றும் விராட் கோலி இந்திய அணியை கரை சேர்ப்பார்களா? இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் கோப்பையை வென்று கொடுப்பார்களா? ரியல் லெவனில் ட்ரேடு செய்யுங்கள், கேள்விகளுக்கு பதிலளித்து வெற்றி பெறுங்கள்" என்று கௌதம் கம்பீர் பதிவிட்டு இருந்தார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ஒருவர், இதுபோன்ற கிரிக்கெட் விளையாட்டு சார்ந்த சூதாட்ட நிறுவனத்தின் விளம்பர தூதராக இருக்கலாமா? அப்படியே இருந்தாலும், முக்கியமான இறுதிப் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவரது சொந்த சமூக வலைதள பக்கத்தில் இதுபோன்ற விளம்பரத்தை வெளியிடலாமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த விளம்பரத்தை அந்த நிறுவனம் அவர்களது பக்கத்தில் வெளியிட்டிருந்தால், இவ்வளவு பெரிய சர்ச்சை உருவாகி இருக்காது. கௌதம் கம்பீரின் பெயரை அந்த நிறுவனம் பயன்படுத்தி விளம்பரம் செய்கிறது என்று ரசிகர்கள் கருதியிருப்பார்கள். ஆனால், கௌதம் கம்பீரே இந்த விளம்பரத்தை தனது சொந்த சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டதுதான் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது அணியின் நலனுக்கு முரணாக அமையாதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும், ஒரு அணியின் தலைமை பயிற்சியாளர், பேண்டஸி ஸ்போர்ட்ஸ் அணியை உருவாக்கும் ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாமா? என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்பு சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தபோதும், இதேபோல சூதாட்ட நிறுவன விளம்பர தூதராக செயல்பட்டார். அது தொடர்பான விளம்பரங்களிலும் நடித்தது அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
தற்போது இந்திய அணியில் இருக்கும் பல முன்னணி வீரர்களும் பல்வேறு சூதாட்ட செயலிகளின் விளம்பர தூதர்களாக உள்ளனர். அதனால் இது ஒரு கடந்து போகக் கூடிய விஷயமாக மாறிவிட்டது. எனினும், இது எதிர்காலத்தில் கிரிக்கெட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? பிசிசிஐ இது தொடர்பாக விதிகளை மாற்றுமா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.