புதுடெல்லி : கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்துவரும் நிலையில், மற்றவர்களின் நலனுக்காக பணியாற்றிவரும், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் ஆகியோருக்கு இந்திய ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்திலும் தங்களது சுயநலனை பார்க்காமல் செயலாற்றி வரும் இவர்களுக்கு அனைவரும் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும், அவர்களின் பாதுகாப்புக்காக பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்திவரும் நிலையில், சர்வதேச அளவில் அனைத்து போட்டிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து விளையாட்டு வீரர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,00,000த்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 65,000ஐ நெருங்கியுள்ளது. இந்த நெருக்கடியான சூழலையொட்டி சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிகள், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கடந்த 29ம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் 2020 தொடரும் இம்மாதம் 15ம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இவை மேலும் ஒத்திவைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆயினும் ஐபிஎல் போட்டிகளை நடத்த சர்வதேச அளவில் பல வீரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஐபிஎல் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அனைத்து விளையாட்டு வீரர்களும் வீட்டில் முடங்கியுள்ளனர்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், வீடுகளில் முடங்கியுள்ள விளையாட்டு வீரர்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் தங்களது சமூகவளைதளங்களில் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் வீட்டிலிருந்தபடியே பொழுதுகளை போக்கும் வீடியோக்கள், பயிற்சி செய்யும் வீடியோக்களையும் போஸ்ட் செய்து வருகின்றனர்.
சமூக வளைதளங்களில் பரபரப்பாக இயங்கிவரும் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங், தற்போது, இந்த நெருக்கடி நேரத்தில் தன்னலம் கருதாமல் மக்களுக்கான பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அவர்களின் சேவைகளுக்கு அனைவரும் கடமைப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பாதுகாப்புக்காக பிரார்த்தனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.