டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன. இந்தியாவிலும் 28 பேர் இதன் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை இந்த ஆண்டின் இறுதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சர்வதேச அளவில் பல நாடுகளை சேர்ந்த 70 வீரர்கள் உள்ளிட்ட 150 பேர் ஐபிஎல் போட்டிக்காக இந்தியா வரவுள்ள நிலையில், இதுகுறித்து எந்த முடிவும் எடுக்காமல் ஐபிஎல் நிர்வாகம் பொறுமை காத்து வருகிறது.
சீனாவில் துவங்கி தற்போது சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் மட்டுமே 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து பல்வேறு நாடுகள் தங்களது நாடுகளில் வெளிநாட்டினர் நுழைய கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன.
கொரோனா வைரஸ் பாதிப்பையடுத்து இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை ஆண்டு இறுதிக்கு ஒத்திவைத்து ஒலிம்பிக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளை ஒத்திவைத்து அந்தந்த நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். ஆனால் வரும் 29ம் தேதி துவங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கான முன்னேற்பாடுகள் மற்றும் பயிற்சிகள் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதை ஒத்திவைக்கும் எந்த திட்டமும் இப்போதுவரை பிசிசிஐ சார்ட்டில் இல்லை. மாறாக, செலவை குறைக்கும் நடவடிக்கையாக, பரிசுத்தொகையை பாதியாக குறைத்து அறிவித்துள்ளது பிசிசிஐ.
ஐபிஎல் துவங்குவதற்கு இன்னும் 24 நாட்களே உள்ளன. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டி தொடரை அடுத்து இந்திய அணியினர் தொடர்ந்து ஐபில் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் அவர்களுக்கான பயிற்சி முகாம்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்காவில் இருந்து அவர்கள் நேரிடையாக இந்த பயிற்சி முகாம்களில் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 70 வீரர்கள், டஜனுக்கும் மேற்பட்ட நடுவர்கள், வர்ணனையாளர்கள், பல நாடுகளை சேர்ந்த செய்தியாளர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் ஆண்டுதோறும் ஐபிஎல்லின்போது இந்தியா வருவார்கள். இந்த ஆண்டும் இவர்களின் வருகை இருக்கும்.
கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் சர்வதேச கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இந்தியா வருவதற்கான நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இதுகுறித்தெல்லாம் எந்த கவலையும் இன்றி, ஐபிஎல் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பிசிசிஐ கர்மசிரத்தையுடன் செய்து வருகிறது.
இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகிகள் இந்த வாரத்தில் மும்பையில் கூடவுள்ளதாகவும், அப்போது இதுகுறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வரும் வீரர்கள் உள்ளிட்டவர்கள் குறித்து மட்டுமின்றி, ஐபிஎல் மூலமாக நேரிடையாக மறைமுகமாக நடைபெறும் தொழில்கள், விளம்பரங்களின் பாதிப்பு முக்கியமாக டைட்டில் ஸ்பான்சரான விவோ குறித்தெல்லாம் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தெற்காசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இல்லை என்பது ஆறுதலளிக்கும் விஷயம் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.