ஃபுளோரிடா: இந்திய அணிக்கு எதிராக வெற்றிபெற்ற உணர்வை சொல்வதற்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பாவெல் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அதளபாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இருமுறை உலகக்கோப்பை வென்ற அணியால், உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவதற்கு கூட தகுதிபெற முடியவில்லை. இதனால் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, 3 வகையான கிரிக்கெட் தொடர்களிலும் எளிதாக வெற்றிபெறும் என்றே பார்க்கப்பட்டது.

ஆனால் டெஸ்ட் தொடரை தவிர்த்து, ஒருநாள் நல்ல சவாலை இந்திய அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் கொடுத்தது. ஆனால் டி20 தொடரில் நிக்கோலஸ் பூரன் இந்திய அணியின் ஒட்டுமொத்தமாக மிரட்டிவிட்டார் என்றே சொல்லலாம். அதேபோல் அடுத்தடுத்து இரு போட்டிகளில் தோல்வியடைந்த போதும், கடைசி போட்டியில் அசராமல் சொல்லி வைத்து வெற்றிபெற்றிருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பாவெல்.
நேற்று தோல்வியின் பக்கம் நின்றிருந்த அவர், இன்று வெற்றியின் பக்கம் நெகிழ்ச்சியுடன் இருந்தார். இந்த வெற்றிக்கு பின் ரோவ்மன் பாவெல் பேசுகையில், இந்த வெற்றியை பற்றி பேசுவதற்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை. நேற்று மாலை அணியினர் அனைவரும் சந்தித்து ஆலோசித்தோம். பயிற்சியாளர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது என்றே சொல்வேன். அடுத்தடுத்து இரு தோல்விக்கு பின் எங்களிடம் எந்த அச்சமும் இல்லை. இதுபோன்ற ஒரு வெற்றிக்காக தான் வெஸ்ட் இண்டீஸ் மக்கள் நீண்ட ஆண்டுகளாக காத்திருந்தார்கள்.
நான் எப்போதும் தனி வீரரின் சாகசங்களுக்கு ரசிகனாக இருப்பவன். எந்த வீரர் தனியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அதற்கான பலன் அணிக்கு தான் கிடைக்கும். அதுபோன்ற சாகசங்களை செய்யக் கூடிய வீரர் தான் நிக்கோலஸ் பூரன். நாங்கள் அவரிடம் 3 சிறந்த இன்னிங்ஸ்களை ஆட வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அதனை பூரன் சிறப்பாக செய்து முடித்துள்ளார். ஏனென்றால் அனைத்து போட்டிகளிலும் ஒரு வீரரால் அவ்வளவு சிறப்பாக செயல்பட முடியாது.
அதேபோல் வலிமையான இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை தடுத்து நிறுத்திய எங்கள் பவுலர்களை பாராட்டியே ஆட வேண்டும். அதேபோல் ரசிகர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நாங்கள் தோல்வியடைந்த போது கூட ரசிகர்கள் எங்களை பாராட்டவே செய்தார்கள். மைதானத்திற்கு வந்து நேரடியாக மட்டுமல்லாமல், சோசியல் மீடியாவிலும் கூட பாராட்டுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.