கொரோனாவால் தள்ளிவைப்பு
கடந்த மார்ச் 29ம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் 2020 தொடர் கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்டு பின்பு காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளன. வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் டி20 உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டால் அந்த அட்டவணையில் இந்த தொடரை நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
டி20 போட்டிகள் ரத்து செய்ய வாய்ப்பு
இந்நிலையில், இந்த ஆண்டில் டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணியினர் மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணத்திலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று இரு அணிகளும் ஆடவிருந்த நிலையில் தற்போது,ஒருநாள் அல்லது டி20 தொடர் ரத்து செய்யப்படும் என்றும் டெஸ்ட் போட்டிகளும் ஒரு வாரம் தள்ளி வைக்கப்படும் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போட்டிகள் குறைக்கப்பட வாய்ப்பு
இதேபோல இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து அணியினர் 5 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இதில் டெஸ்ட் போட்டிகள் 5லிருந்து 3ஆக குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மார்ச் -மே அட்டவணையில் நடத்த திட்டம்
மார்ச் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்க அணியினரின் தொடர், கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல காலவரையின்றி ஐபில் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டாலும் அடுத்த ஆண்டில் மார்ச் -மே மாத அட்டவணைக்குள் ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடிக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.