பார்படாஸ் : பாகிஸ்தான் அணியின் வேகபந்துவீச்சாளர் முஹம்மத் இர்பான் டி20 போட்டிகளில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். டி20 போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்த வீரர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகள் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் பார்படாஸ் ட்ரிடெண்ட் அணியும் செயிண்ட் கிட்ஸ் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியும் மோதின.முதலில் பேட்டிங் செய்த பார்படாஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்தது. அதனை தொடர்ந்து ஆடிய செயின்ட் கிட்ஸ் அணி 18.5 ஓவர்களில் 148 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.முஹம்மத் இர்பான் சாதனை :இப்போட்டியில் பார்படாஸ் அணிக்காக விளையாடிய முஹம்மத் இர்பான் அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் ஒரேயொரு ரன்னை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதில் 3 ஓவர்கள் மெய்டன் என்பது குறிப்பிடத்தக்கது (அவரது பந்துவீச்சு 4-3-2-1). அவர் இவ்வளவு சிறப்பாக பந்துவீசிய போதிலும் அவரது அணி தோல்வியை தழுவியது.இதற்கு முன்னால் கிறிஸ் மோரிஸ் மற்றும் சனகா வேலெகேதாரா ஆகியோர் நான்கு ஓவர்களை வீசி 2 ரன்கள் கொடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது இர்பான் அதனை முறியடித்துள்ளார். மேலும் அவரது கடைசி பந்தில் தான் அந்த ஒரு ரன் கூட எடுக்கப்பட்டது. இல்லையென்றால் 4 மெய்டன் ஓவர்களை வீசி உலக சாதனையை படைத்திருப்பார்.மேலும் 20 ஓவர் போட்டிகளில் 3 மெய்டன் ஓவர்களை வீசிய ஐந்தாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.