ஆகஸ்ட் 18ல் துவக்கம்
கடந்த 2013 முதல் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இந்த ஆண்டு சீசன் வரும் 18ம் தேதி துவங்கவுள்ளது. ட்ரினிடாட் மற்றும் டோபாகோ ஆகிய பகுதிகளில் உள்ள மைதானங்களில் நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காகவும் முன்னதாக குவாரன்டைனில் ஈடுபடுவதற்காகவும் அணி வீரர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர்.
முதலிடத்தில் கிறிஸ் கெயில்
கடந்த 2013ல் இருந்து இந்த தொடர் நடைபெற்றுவரும் நிலையில், இந்த ஆண்டு தொடரின் 8வது சீசன் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் அதிக ரன் எடுத்த வீரர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார் கிறிஸ் கெயில். ஜமய்க்கா தாலவாஸ், செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பாட்ரியாஸ் ஆகிய அணிகளில் விளையாடியுள்ள இவர், 76 போட்டிகளில் விளையாடி 2,354 ரன்களை குவித்துள்ளார். இவரை தொடர்ந்து முதல் 5 இடங்களில் லென்டில் சிம்மன்ஸ், ஆன்ட்ரி ப்ளெட்சர், ஜான்சன் சார்லஸ் மற்றும் சாத்விக் வால்டன் ஆகியோர் உள்ளனர்.
முதலிடத்தில் ட்வைன் பிராவோ
இதேபோல சிபிஎல் தொடரில் விளையாடிய வீரர்களில் அதிக விக்கெட்டுகளை குவித்தவர்களில் முதலிடத்தில் ட்வைன் பிராவோ உள்ளார். ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிவரும் இவர் 69 போட்டிகளில் விளையாடி 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரை தொடர்ந்து முதல் 5 இடங்களில் கிரிஷ்மர் சாண்டோகி, ரியாட் எம்ரிட், சுனில் நரேன் மற்றும் ஷெல்டன் காட்ரெல் ஆகியோர் உள்ளனர்.
கிறிஸ் கெயில், ட்வைன் ஸ்மித் முதலிடம்
இதுவரை நடைபெற்றுள்ள சிபில் தொடர்களில் 4 சதங்களை அடித்து கிறிஸ் கெயில் மற்றும் ட்வைன் ஸ்மித் ஆகிய வீரர்கள் முதலிடத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் இந்த ஆண்டு சிபிஎல்லில் பங்கேற்க மாட்டார்கள். ஸ்மித் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், கிறிஸ் கெயில், முன்னாள் ஜமய்க்கா தாலவாஸ் அணியின் இயக்குநருடன் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக விளையாடவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
பிரான்டன் கிங் முதலிடம்
இந்நிலையில் ஒரு போட்டியில் அதிக ரன்களை அடித்த சிபிஎல் வீரர் என்ற பெருமையை பிரான்டன் கிங் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் பார்படாஸ் ட்ரிடன்ஸ் அணிக்கு எதிராக குயானா அமேசான் வாரியர்ஸ் அணியில் விளையாடிய இவர் இந்த ஸ்கோரை எட்டினார். இவரை அடுத்து ஆன்ட்ரூ ரஸ்ஸல், கிறிஸ் கெயில், ட்வைன் ஸ்மித் ஆகியோரும் சதங்களை அடித்து அதிக ரன்களை எடுத்த வீரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.