
9வது லீக் ஆட்டம்
கரீபியன் லீக் தொடரின் 9வது லீக் ஆட்டமான இதில் தான் பொல்லார்டை கடும் கோபத்திற்கு உள்ளாக்கும் செயல் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் பொல்லார்ட் இடம்பெற்றுள்ள ட்ரிபாகோ நைட் ரைடர்ஸ் அணி தான் முதலில் பேட்டிங் செய்துக் கொண்டிருந்தது. இதில் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 158 ரன்கள் எடுத்தது. டாப் ஆர்டர் சொதப்பினாலும், மிடில் ஆர்டரில் பொல்லார்ட் மற்றும் டிம் செய்ஃபெர்ட் ஆகியோர் இணைந்து 70 ரன்களுக்கும் மேலும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டனர்.

நடுவரின் தவறான முடிவு
இந்த ஜோடி அதிரடிக் காட்டி கொண்டிருந்த நேரத்தில் களத்தில் இருந்த நடுவர் தவறான முடிவை அறிவித்தார். ஆட்டத்தின் 19வது ஓவரின் போது டிம் செய்ஃபெர்ட் பேட்டிங் செய்துக் கொண்டிருந்தார். வஹாப் ரியாஸ் வீசிய அந்த ஓவரின் 5வது பந்து வைட் லைனிற்கு வெளியே சென்றது. பேட்ஸ்மேன் டைவடித்துப் பார்த்தும் அந்த பந்தை தொட முடியவில்லை. இதனால் பேட்ஸ்மேன் தரப்பிடமிருந்து வைட் பால் கொடுக்குமாறு நடுவரிடம் கேட்கப்பட்டது. ஆனால் ஸ்டம்ப் அம்பயர் அதற்கு வைட் தர மறுத்துவிட்டார்.
பொல்லார்டின் விநோத செயல்
அப்போது பிட்ச்-ன் மறுமுனையில் நின்றுக்கொண்டிருந்த பொல்லார்ட், அதிருப்தியில், நடுவரிடம் விளக்கம் அளித்து வைட் பால் கொடுக்குமாறு கேட்டார். எனினும் சாதகமான முடிவு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கெய்ரின் பொல்லார்ட், பிட்ச்-ல் இருந்து வெளியேறினார். நீண்ட தூரத்திற்கு நடந்து சென்ற அவர், மிட் விக்கெட் பொஷிஷனில் ரன் ஓடுவதற்காக நின்றார். இது அனைவருக்கும் வியப்பை அளித்தது.

முதல் முறையல்ல
கெயிரன் பொல்லார்ட் இதுபோன்று செயல்படுவது முதல்முறையல்ல, இதற்கு முன்னர், ஐபிஎல் தொடர் மற்றும் சர்வதேச போட்டிகளிலும் இதுபோன்று வினோதமான முறையில் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அந்த பட்டியலில் தற்போது புதிய சம்பவம் இணைந்துள்ளது. இதனையடுத்து அதுகுறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

அபார வெற்றி
நடுவரின் முடிவில் ட்ரிபாகோ நைட் ரைடர்ஸ் அணி ஏமாற்றத்தை சந்தித்திருந்தாலும், போட்டியில் வெற்றி பெற்றது. 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.


Click it and Unblock the Notifications











