மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற்றாலும் வெளிநாடுகளில் நடக்கும் எந்த தொடரிலும் பங்கேற்க கூடாது என பிசிசிஐ அண்மையில் அறிவுறுத்தியது.
எனினும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியாகவில்லை. இந்த நிலையில் 37 வயதான சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் அம்பத்தி ராயுடு இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

மேலும் அமெரிக்காவில் நடைபெற்ற மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் சிஎஸ்கே நிர்வாகம் வாங்கிய டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட அம்பதி ராயுடு ஒப்பந்தமானார். எனினும் பிசிசியின் இந்த அறிவிப்பை அடுத்து ராயுடு அந்த தொடரில் இருந்து விலகினார். ஆனால் ஜிம்பாப்வேவில் நடைபெற்ற 10 ஓவர் கிரிக்கெட் லீக் தொடரில் இந்திய வீரர்கள் ராபின் உத்தப்பா, யூசுப் பதான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
இதனால் கடுப்பான ராயுடு தமக்கு மட்டும் ஏன் பிசிசிஐ இவ்வாறு கூறியது என்று கோபத்தில் சுற்றி கொண்டு இருந்தார். இந்த நிலையில் தான் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் களமிறங்குவதற்கு அம்பத்தி ராயுடுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த லீக் தொடரில் உள்ள செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்டிரியாட் என்ற அணிக்கு ராயுடு விளையாட ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
இந்த செய்தி வெளிவந்த உடன் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். எனினும் பிசிசிஐ இதுகுறித்து எந்த ஒரு விளக்கமும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை ராயுடு வெஸ்ட் இண்டீஸ் இல் நடைபெறும் கரபியன் பிரிமியர் லீக் தொடரில் விளையாடினால் அந்த தொடரில் பங்குபெறும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.
இதற்கு முன்பு பிரவீன் தாம்பே சி பி எல் தொடரில் விளையாடிதது குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர்கள் தற்போது வெளிநாட்டு மண்ணில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறார்கள். இதனால் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட பிசிசிஐ அனுமதி அளிப்பது போல் இந்த டி20 கிரிக்கெட் தொடர்களிலும் இந்திய வீரர்களை அனுப்ப வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.