கயானா: 2024 கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை செயின்ட் லூசியா கிங்ஸ் அணி வீழ்த்தியது. இந்தப் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் கடைசி 5 ஓவர்களில் 66 ரன்கள் தேவை என்ற நிலையில் செயின்ட் லூசிய கிங்ஸ் அணி வெறும் 20 பந்துகளில் அந்த 66 ரன்காலி எடுத்து வெற்றி பெற்றது.
அதற்கு முன் 61 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை. ஆனால், அடுத்த 20 பந்துகளில் போட்டி மின்னல் வேகத்துக்கு சென்றது. ராஸ்டன் சேஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் இணைந்து இந்த வெற்றியை சாத்தியம் ஆக்கினர். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கயானா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் மிக மோசமாக ஆடி பந்துகளை வீணடித்து சொதப்பினர்.

ஆனால், ஒன்பதாம் வரிசையில் இறங்கிய பந்து வீச்சாளர் டிவைன் பிரிட்டோரியஸ் 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து அணியை காப்பாற்றினார். எட்டாம் வரிசையில் இறங்கிய ரொமாரியோ ஷெப்பர்ட் 9 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்திருந்தார். இவர்கள் இருவரும் கடைசி நேரத்தில் ஆடிய அதிரடி ஆட்டத்தால் மட்டுமே கயானா அணி 138 ரன்கள் எடுத்தது.
கயானா அணியின் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் ஷாய் ஹோப் 22 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட 15 ரன்களை தாண்டவில்லை. அடுத்து 139 ரன்கள் என்ற இலக்கை நோக்கி செயின்ட் லூசியா கிங்ஸ் அணி ஆடியது. அந்த அணியின் துவக்க வீரர் மற்றும் கேப்டன் ஃபாப் டு பிளேசிஸ் 21 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். ஜான்சன் சார்லஸ் 10 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தார்.
மூன்றாம் வரிசையில் இறங்கிய ஆக்கிம் அகஸ்டி 15 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்தார். நான்காம் வரிசையில் இறங்கிய அதிரடி பேட்ஸ்மேன் டிம் செய்ஃபர்ட் 10 பந்துகளை சந்தித்து வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். 9.5 ஓவர்களில் வெறும் 51 ரன்கள் எடுத்து 4 விக்கெட்களை இழந்து இருந்தது லூசியா கிங்ஸ்.
மேலும், ஐந்தாவது ஓவரின் முடிவில் இருந்து 15வது ஓவர் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. களத்தில் ஆரோன் ஜோன்ஸ் மற்றும் ராஸ்டன் சேஸ் இருந்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து 11 வது ஓவரிலிருந்து 15 வது ஓவர் வரை வெறும் 22 ரன்கள் சேர்த்து இருந்தனர். அப்போது டெஸ்ட் போட்டி போல ஆடிக் கொண்டிருந்தது லூசியா கிங்ஸ். கடைசி ஐந்து ஓவர்களில் 66 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது ஆட்டம்.
அப்போது லூசியா கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி களத்தில் இருந்த பேட்ஸ்மன்களுக்கு ஒரு செய்தியை அனுப்பினார். அதன் பின் ராஸ்டன் சேஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் அதிரடியின் உச்சத்துக்கு சென்றனர். அவர்கள் அதிரடியாக ஆடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், இப்படி ஆடுவார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
16வது ஓவரில் மட்டும் 27 ரன்கள் எடுத்தனர். 17வது ஓவரில் 20 ரன்களும், 18வது ஓவரில் 18 ரன்களும் சேர்த்தனர். அப்போதே ஸ்கோர் சமநிலையை எட்டியது. 18.2 ஓவரின் முடிவில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. வெறும் 20 பந்துகளில் கடைசி 66 ரன்களை எடுத்திருந்தது ராஸ்டன் சேஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் ஜோடி. ராஸ்டன் சேஸ் 22 பந்துகளில் 39 ரன்களும், ஆரோன் ஜோன்ஸ் 31 பந்துகளில் 48 ரன்களும் சேர்த்து இருந்தனர். இதன் மூலம் முதன்முறையாக சிபிஎல் கோப்பையை வென்று வரலாறு படைத்தது லூசியா கிங்ஸ் அணி.