மும்பை: 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்றதற்கான பெருமை அப்போதைய தலைமை பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனையே சேரும் என்று முன்னாள் வீரர சேவாக் தெரிவித்துள்ளார். இதனால் தோனியின் பங்கு இல்லையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்திய அணி ஆடிய உலகக்கோப்பை தொடர்களில் மோசமாக அமைந்தது 2007ஆம் ஆண்டுதான். வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகளிடம் தோல்வியடைந்து லீக் சுற்றோடு வெளியேறியது இந்திய அணி. அதனை இந்திய அணியின் இருண்ட காலம் என்று இன்றளவும் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் 2007ஆம் உலகக்கோப்பை தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சேவாக் மனம் திறந்துள்ளார்.

அதில், 2007ஆம் ஆண்டு இந்திய அணியை பார்த்தீர்கள் என்றால் அனைவரும் சிறந்த வீரர்கள். ஏனென்றால் 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. அதனால் அடுத்த உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் சிறப்பாக தயாராகி வந்தோம். ஆனால் நாங்கள் 3 ஆட்டங்களில் வெளியேறினோம். ரசிகர்கள் அனைவரும் நாங்கள் சூப்பர் 8 சுற்றுக்கு செல்வோம் என்று எதிர்பார்த்தார்கள். ரசிகர்களை ஏமாற்றியதுதான் எங்களுக்கு மோசமான உணர்வை கொடுத்தது.
3வது போட்டியில் தோல்வியடைந்த பின், நாங்கள் நாடு திரும்புவதற்கு 2 நாட்கள் இடைவெளி ஏற்பட்டது. உடனடியாக நாடு திரும்ப டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்பதால், வெஸ்ட் இண்டீஸில் இரு நாட்கள் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்களுக்கு எந்த பயிற்சியும் இல்லை, வேலையும் இல்லை. எனது ரூமை சுத்தம் செய்ய கூட நான் ஆட்களை அழைக்கவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், நான் எனது அறையை விட்டு வெளியேறவே இல்லை.
அப்போது என்ன செய்வதென தெரியாமல் இருந்த போது, அமெரிக்காவில் இருந்த நண்பன் ஒருவன் "ப்ரிசன் ப்ரேக்" இணையத் தொடரை பார்க்க அறிவுறுத்தினே. அந்த வெப் சீரிஸை 2 நாட்களில் இரவு பகலாக வேறு வழியின்றி பார்த்து முடித்தேன். அந்த 2 நாட்களில் நான் யாரின் முகத்தையும் பார்க்கவே இல்லை. அதன்பின்னர் ஆடிய 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்றெடுத்தோம். அதற்கு முக்கியமான காரணம், பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் தான்.
2008ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் பயிற்சியாளராக வந்த அவர், ஒவ்வொரு போட்டியையும் நாக் அவுட் போட்டியை போலவே எங்களை ஆட வைத்தார். அதனால் உலகக்கோப்பை நாக் அவுட் போட்டிகளில் விளையாடும் போது, எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லாமல் இருந்தது. என்னை பொறுத்தவரை 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரை வென்றதற்கு முக்கிய காரணம் கேரி கிறிஸ்டனையே சேரும் என்று தெரிவித்துள்ளார். சேவாக்கின் கருத்து தோனி ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.