லீட்ஸ்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்காக லண்டன் வந்ததில் இருந்து அலெக்ஸ் கேரி முடி வெட்டிக் கொள்ளவில்லை என்று ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆஷஸ் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பேர்ஸ்டோவை ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஸ்டம்பிங் செய்து வீழ்த்தினார். இது இங்கிலாந்து ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக லார்ட்ஸ் மைதானத்திலேயே ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இங்கிலாந்து ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் அலெக்ஸ் கேரி ஸ்டம்பிங் சர்ச்சை இங்கிலாந்து முழுவதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கிய போது கூட இங்கிலாந்து ரசிகர்கள் ஆவேசமாக விமர்சித்தனர்.
இந்த நிலையில் அலெக்ஸ் கேரி லண்டனில் உள்ள சலூன் கடையில் முடி திருத்தம் செய்துவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக சலூன் கடை உரிமையாளர் ஆடம் முகமது என்பவர், வரும் திங்கட் கிழமைக்குள் அலெக்ஸ் கேரி பணத்தை கொடுக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த "The Sun" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது ஆஸ்திரேலிய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த வேறு ஒரு நபர் தான் சலூன் கடை சென்றுள்ளார். அதற்கும் சரியான கட்டணத்தையும் கொடுத்துவிட்டார். அதற்கான கட்டணத்திற்கான ரசீது கூட இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது த்ரெட் பக்கத்தில், நாங்கள் லண்டன் வந்ததில் இருந்து அலெக்ஸ் கேரி முடியை வெட்டவில்லை என்பதை உறுதியாக செல்வேன் என்று பதிவிட்டதோடு, The Sun நிறுவனம் வெளியிட்ட செய்தியின் உண்மைத்தன்மையையும் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் கோபமடைந்த ஆஸ்திரேலியா ரசிகர்கள், இங்கிலாந்து ரசிகர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.