சிட்னி: 2015ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் பத்து அணிகள் மட்டுமே பங்கேற்கும் என்று ஐசிசி அறிவித்துள்ளதை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வரவேற்றுள்ளது.
2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் குட்டி அணிகள் இடம் பெறாது என்று ஐசிசி அறிவித்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் ஆடி வரும் 10 அணிகள் மட்டுமே பங்கேற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், 2019ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியில் தகுதி அடிப்படையில் 10 அணிகள் தேர்வு செய்யப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது. இதை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட்வாரிய தலைமை செயலதிகாரி ஜேம்ஸ் சுதர்லேன்ட் கூறுகையில், நடந்து முடிந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட்டின் போது எங்களுக்கு பெரிய போட்டிகளுக்கு நடுவே இரண்டு முறை 7 நாள் இடைவெளி கிடைத்தது. இந்த இடைவெளியில் குட்டி அணிகளுடன் நாங்கள் மோத நேரிட்டது. இது எங்களது கவனத்தை திசை திருப்பதுவதாக அமைந்தது.
இதை தவறு என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் பெரிய அணிகளுடன் மோதிக் கொண்டிருக்கும்போது சிறிய அணிகளுடன் மோதி நாங்கள் சோர்வடைய நேரிட்டது. இதனால் பாகிஸ்தானுடனான போட்டியின்போது எங்களுக்கு போதிய அவகாசம் கிடைக்காமல் போய் விட்டது.
தற்போது அடுத்த உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.
பத்து அணிகள் என்பது சரியானதாக இருக்கும். மேலும் பத்து அணிகளும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதி விட்டு நேரடியாக அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி என்று இந்த ஃபார்மட் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
ஐசிசியின் புதிய முடிவுப்படி, தற்போதைய உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய டெஸ்ட் ஆடாத அணிகளான அயர்லாந்து, நெதர்லாந்து, கென்யா, கனடா, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் அடுத்த உலகக்கோப்பைப் போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.