மோசமான நிலையில் ஆஸி.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பந்து சேத விவகாரத்திற்கு பின் பெரும் அடி வாங்கி வருகிறது. பல தொடர்களை மிக மோசமாக தோற்றுள்ளது அந்த அணி. ஓரளவு ஆடும் அணிகளுக்கு எதிராக கூட ஆஸ்திரேலியா நிச்சயம் தோற்கும் என்ற நிலை தான் தற்போது உள்ளது. டிசம்பர் 6 முதல் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது ஆஸ்திரேலியா.
அறிவுரை இது தான்
கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பிற்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தலைவர் இயர்ல் எட்டிங்க்ஸ் டெஸ்ட் தொடருக்கு முன் தன் அணி வீரர்களுக்கு அறிவுரை கூறினார். அதில் "கடுமையாக ஆடுங்கள் ஆனால் நியாயமாக இருக்கவேண்டும். நன்றாக வெற்றி பெறுங்கள் அல்லது சிறப்பாக தோல்வி அடையுங்கள்" என கூறியுள்ளார்.
மீசையை முறுக்கு வசனம்
ஹிப்ஹாப் ஆதி தன் "மீசையை முறுக்கு" படத்தில் "தோத்தாலும், ஜெயிச்சாலும் மீசையை முறுக்கு" என வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் முயற்சி செய்ய வேண்டும் என கூறி இருந்தார். இது காலம் காலமாக பலரும் கூறி வரும் ஒரு விஷயம் என்றாலும் ஆதி கூறிய விதம் புதிதாக இருந்தது. இது இளைஞர்கள் மத்தியில் பிரபலமான வசனமாக மாறியது. அதே போல கிட்டத்தட்ட எந்த கிரிக்கெட் அமைப்பின் தலைவரும் கூறாத வகையில் புதுமையாக தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை நியாயமாக இருக்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர்.
தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை
ஏன் இப்படி தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை என கூறியுள்ளார் என பார்த்தால், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றும் ஒரு முயற்சி இது என தெரிகிறது. பந்து சேத விவகாரத்திற்கு பின்னும் பழைய அணியை மனதில் கொண்டு "ஆஸ்திரேலிய கிரிக்கெட் என்றாலே இப்படி தான்" என்ற ஒரு பிம்பம் இருக்கிறது. அதில் இருந்து ஆஸ்திரேலிய அணி வெளியே வர முயற்சி செய்து வருகிறது. மற்றவர்களின் பார்வையை, குறிப்பாக சொந்த நாட்டு மக்களின் பார்வையை மாற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் முயற்சித்து வருகிறது. அதனாலேயே, தோல்வி அடைந்தால் கூட பரவாயில்லை, நாம் நியாயமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார் இயர்ல் எட்டிங்க்ஸ்.