IPL: “ஐபிஎல் தொடரில் இனி ஆடாதீர்கள்.. 100 கோடி தருகிறோம்”.. செக் வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட்
சிட்னி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை விட, ஐபிஎல் போன்ற தனியார் டி20 லீக் போட்டிகளில் விளையாடினால் பல மடங்கு அதிக பணம் கிடைக்கும் என்ற நிலை இன்று உருவாகியுள்ளது. இதனால் பல நட்சத்திர வீரர்கள் தங்களது நாட்டுக்காக விளையாடுவதை விட, ஐபிஎல் போன்ற தொடர்களுக்கு முன்னுரிமை அளிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை வளைக்க ஒரு ஐபிஎல் அணி போட்ட ரகசியத் திட்டம் வெளியான நிலையில், அவரைத் தக்கவைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பேசிய பேரம் கிரிக்கெட் உலகை மிரள வைத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவருக்கும் ஒரு பிரபல ஐபிஎல் அணி ஒரு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. சுமார் 10 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 84 கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்து, "சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு முழுநேரமாக எங்கள் அணியின் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடுங்கள்" என அந்த ஐபிஎல் அணி பேரம் பேசியுள்ளது. இந்தத் தகவல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு எட்டவே, அவர்கள் பதறிப்போய் ஒரு 'மெகா' ஒப்பந்தத்தைத் தயார் செய்துள்ளனர்.

தனது நாட்டு வீரர்களைத் தக்கவைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இப்போது பாட் கம்மின்ஸுக்கு 12 மில்லியன் டாலர், அதாவது சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு புதிய ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. இதன்படி ஆண்டுக்கு 33 கோடி ரூபாய் வீதம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் ஆஸ்திரேலிய அணிக்காக மட்டுமே விளையாட வேண்டும். உலகின் எந்த டி20 தொடர்களிலும் பங்கேற்கக் கூடாது. குறிப்பாக 2029 ஆம் ஆண்டு வரை அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனை. பாட் கம்மின்ஸைத் தொடர்ந்து டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுசேன் ஆகியோருக்கும் இதே போன்ற ஒப்பந்தங்கள் வழங்கப்படவுள்ளன.
ஏன் இந்த அதிரடி நடவடிக்கை? இதற்கு ஒரு கசப்பான வரலாறு பின்னணியில் உள்ளது. ஒரு காலத்தில் உலக கிரிக்கெட்டையே மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று வீழ்ச்சியடைந்ததற்கு முக்கியக் காரணம், அந்த நாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளைப் புறக்கணித்துவிட்டு லீக் போட்டிகளில் விளையாடச் சென்றதுதான். இதே நிலை தங்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் ஆஸ்திரேலிய வாரியம் மிகவும் உறுதியாக உள்ளது.
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையின் கீழ் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஒருபுறம் ஐபிஎல் அணிகள் கோடிக்கணக்கான பணத்தை வீசி வீரர்களைத் தூக்க முயற்சிக்கும் நிலையில், ஆஸ்திரேலிய வாரியம் 100 கோடி ரூபாய் ஒப்பந்தம் மூலம் அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
ஆனால், இந்த ஒப்பந்தத்தை கம்மின்ஸ், ஹெட் ஆகியோர் ஏற்றுக் கொண்டால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக், இந்தியாவின் ஐபிஎல் உட்பட எந்த தனிப்பட்ட டி20 தொடர்களிலும் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
