இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்.. 2 டே- நைட் டெஸ்ட் மேட்சா.. மீண்டும் பிங்க் பாலா.. செம பிளான்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் இந்திய அணியினர் வரும் 2021ல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அந்த தொடரின்போது இரண்டு பகலிரவு போட்டிகளை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியமான கிரிக்கெட் ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் வங்க தேசத்திற்கு எதிரான தனது முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை விளையாடிய இந்தியா, அபார வெற்றியடைந்தது. இதையடுத்து சர்வதேச அளவில் விளையாடும் ஒவ்வொரு தொடரிலும் ஒரு பகலிரவு போட்டியை திட்டமிடலாம் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார்.
வரும் ஜனவரியில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதேபோல வரும் 2021ல் இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

வங்கதேசம் -இந்தியா மோதல்
கடந்த மாதத்தில் வங்கதேச அணியினருடன் இந்தியா தனது முதல் பகலிரவு போட்டியை கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் ஆடியது. ரசிகர்களின் விருப்பத்திற்குரிய டெஸ்ட் போட்டியாக இந்த போட்டி இருந்த நிலையில், இதில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.

முறையான பயிற்சி அவசியம்
இந்த போட்டிக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பிங்க் பந்துகளில் பகலிரவு போட்டிகளை விளையாடுவதற்கு முன்பாக தகுந்த பயிற்சி அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒருநாள் போட்டிகளை விளையாடுகிறது
இந்நிலையில் வரும் ஜனவரி மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணி, இந்தியாவிற்கு எதிராக ஒரு நாள் போட்டிகளை விளையாடவுள்ளது.

2 பகலிரவு போட்டிகளுக்கு திட்டம்
வரும் 2021ல் ஆஸ்திரேலியாவில் இந்திய அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். அந்த சுற்றுப்பயணத்தின்போது ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணியினரை இரண்டு பகலிரவு போட்டிகளில் விளையாட வைக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் திட்டம்
இந்நிலையில் வரும் ஜனவரியில் இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலிய அணியினருடன் இந்தியா வரும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் இயர்ல் எட்டிங்க்ஸ் தலைமையிலான பிரதிநிதிகள், இதுகுறித்து பிசிசிஐயிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.

எட்டிங்க்ஸ் நம்பிக்கை
இதுகுறித்து பேசியுள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் எட்டிங்க்ஸ், பிசிசிஐ ஒரு பகலிரவு போட்டிக்கு ஒப்புக் கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் ஒரே தொடரில் இரண்டு போட்டிகளை நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன.

முதல் முயற்சி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையில் ஒரே தொடரில் இரண்டு பகலிரவு போட்டிகள் நடத்தப்பட்டால், அது முதல் முயற்சியாக இருக்கும். இதன்மூலம் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிட்டும்.


Click it and Unblock the Notifications