நாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா
சிட்னி : நாடு தான் முக்கியம் அப்புறம் தான் ஐபிஎல் எல்லாம் என்ற கடுமையான முடிவை எடுத்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் பந்து சேத விவகாரத்திற்கு பின் படு மோசமான நிலையை அடைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தோல்வி மேல் தோல்வியை சந்தித்து வருகிறது.
முன்னணி வீரர்கள் ஸ்மித், வார்னர் ஓராண்டு தடை பெற்று இருக்கின்றனர். மேலும், மற்ற வீரர்கள் மனதளவில் பந்து சேத விவகாரத்தின் பின்விளைவுகளால் பாதிப்படைந்து உள்ளனர்.

ஐபிஎல் முடியும் முன்னரே..
வரும் மே 30 முதல் தொடங்கும் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஐபிஎல் தொடர் நடைபெறுகிறது, ஐபிஎல் தொடர் தற்போதுள்ள அட்டவணையின் படி மே மாதம் பாதியில் முடியும். ஆனால், ஆஸ்திரேலிய அணி மே முதல் வாரத்தில் இருந்து உலகக்கோப்பைக்கு பயிற்சியை துவங்க உள்ளனர்.

உலகக்கோப்பை பயிற்சி முகாம்
அதனால், ஐபிஎல் தொடரில் ஆடச் செல்லும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரின் முடிவுக்கு முன்னதாகவே உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணிப் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வர வேண்டிய நிலை உள்ளது.

பாகிஸ்தான் தொடர் வரை..
மேலும், மார்ச் 15 முதல் 29 வரை பாகிஸ்தான் அணியுடன் ஆஸ்திரேலியா ஆட உள்ளது. அந்த ஐபிஎல் தொடரில் ஆடும் வீரர்கள் பாகிஸ்தான் தொடரை முழுவதுமாக முடித்த பின்னரே ஐபிஎல் அணிகளோடு இணைய முடியும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியுள்ளது.

உள்ளூர் போட்டிகள் முக்கியம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் மோசமாக உள்ளதால் அதை வலுப்பெற வைக்கும் முயற்சியாக இனி உள்ளூர் தொடரான ஷேஃப்பீல்ட் ஷீல்ட்-இல் முழுவதுமாக பங்கேற்று முடித்த பின்னரே ஐபிஎல் உள்ளிட்ட வெளிநாட்டு டி20 தொடர்களுக்கு அனுமதி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications