
மகளிர் கிரிக்கெட் போட்டிகள்
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டிற்கு மீதான பார்வையை கடந்த 2020ஆம் ஆண்டு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் சற்று மாற்றியது. ஏனென்றால் அதில் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டி வரை சென்று அசத்தியது. இந்த தொடரை ஏராளமானோர் கண்டுக்களித்தனர். இதன் பின்னர் ஆடவர் அணியை போன்றே மகளிர் அணிக்கும் உரிய மரியாதை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது எதுவுமே நடக்கவில்லை.

திடீர் ஏற்பாடுகள்
பிசிசிஐ மீது தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்து கொண்டே தான் உள்ளது. கொரோனா சமயத்தில் ஆண்களுக்கு அடுத்தடுத்து போட்டி தொடர்கள் ஏற்படுத்திய சூழலில் மகளிர் அணிக்கு ஏற்பாடு செய்துகொடுக்கவில்லை எனக்கூறப்பட்டது. இதனையடுத்து இந்திய மகளிர் அணி அடுத்ததாக வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு டி20, மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த 7 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக டெஸ்ட் போட்டியிலும் இந்திய மகளிர் அணி பங்கேற்கிறது.

புதிய சர்ச்சை
இந்நிலையில் தற்போது புது சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஊதிய ஒப்பந்தத்தை நேற்று பிசிசிஐ அறிவித்தது. அதன்படி வீராங்கனைகள் 3 பிரிவுகளில் பிரிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ஏ பிரிவு வீராங்கனைகளுக்கு ரூ. 50 லட்சம், பி பிரிவு வீராங்கனைகளுக்கு ரூ. 30 லட்சம், சி பிரிவு வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபாடு?
ஆடவருக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட வீராங்கனைகளுக்கு வழங்ககூடிய ஊதியம் மிகக்குறைவாக உள்ளது. இந்திய அணியில் ஏ பிரிவு வீரர்கள் ரூ.7 கோடியும், சி பிரிவில் வீரர்கள் ரூ.1 கோடியும் ஊதியம் பெறுகின்றனர். ஏ பிரிவு வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 10% சதவீதம் கூட ஏ பிரிவு வீராங்கனைகளுக்கு வழங்கவில்லை.

ரசிகர்களின் விமர்சனங்கள்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏன் இவ்வளவு பாகுபாடு காட்டப்படுகிறது என பிசிசிஐ-யை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். மகளிர் அணியை விட ஆண்கள் அணி அதிக வருமானத்தை ஈட்டி வருகிறது தான். எனினும் மகளிர் கிரிக்கெட்டை நன்கு பிரபலப்படுத்த வேண்டிய கடமை பிசிசிஐ-க்கு உள்ளதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறைவான போட்டிகள் ஏற்படுத்திக் கொடுப்பதாக எழுந்த புகாருக்கு பதிலளித்த பிசிசிஐ தலைவர் கங்குலி, ஊதிய பிரச்னைக்கு வாய்த்திறப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications