3வது போட்டி
டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் கிரிக்கெட் தொடரை சமன் செய்ய வேண்டும் என்றால் இதில் வெற்றி பெற்றே தீர வேண்டும். அதற்கான ஒரே மாற்றமாக ரிஷப் பண்ட் தான் இருந்தார். தொடர்ச்சியாக சொதப்பி வரும் ரிஷப் பண்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டு விட்டு, நன்றாக ஆடி வரும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
ஸ்பெஷல் அறிவுரை
அதற்கேற்றார் போலவே 3வது போட்டியில் சஞ்சு சாம்சன் இடம்பெற அதிக வாய்ப்புகள் இருந்தது. பெஞ்சில் அமர்ந்திருந்த சஞ்சு சாம்சனுக்கு நேற்றைய தினம், வி.வி.எஸ். லக்ஷ்மன் ஸ்பெஷல் பேட்டிங் பயிற்சிகளை கொடுத்து வந்தார். அதுவும் சூர்யகுமார் யாதவ் - சஞ்சு சாம்சன் ஆகியோர் மிடில் ஆர்டரில் பார்ட்னர்ஷிப் அமைப்பதற்காக இருவரையும் வைத்து அறிவுரைகள் கொடுக்கப்பட்டு வந்தன.
ரசிகர்களின் ஆத்திரம்
இந்நிலையில் பெரிதும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியே மிஞ்சியது. அத்தனை பயிற்சிகளை கொடுத்தும் மீண்டும் பெஞ்சில் உட்காரவே வைத்துள்ளனர். ரிஷப் இடதுகை பேட்ஸ்மேன் என்பதால், நியூசிலாந்தின் பவுலர்களை சமாளிக்க முடியும் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளதாக நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இன்னும் மூன்றே ஆட்டம்
சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு நீக்கப்படுவதற்கு முன்னதாகவே வங்கதேசம் தொடர் வரை ரிஷப் பண்ட்-ஐ தேர்வு செய்து வைத்துள்ளனர். எனவே வங்கதேசத்துடனான 3 போட்டிகள் தான் பண்ட்-க்கு கடைசி வாய்ப்பாக இருக்கும். ஏனென்றால் புதிய தேர்வுக்குழு வந்தால் பண்ட்-ன் நிலையை புரிந்து அவரை நீக்க அதிக வாய்ப்புள்ளது.