டெல்லி : நமது நாட்டின் பெயரை பாரத் என மாற்ற உள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் தனியாக ஒரு சோகத்தில் உள்ளனர்.
"இந்தியா" என்ற பெயரை "பாரத்" என மாற்ற மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணங்களும் கூறப்படுகின்றன.

அந்த அரசியல் காரணங்கள் சில சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. சிலர் இந்த பெயர் மாற்றத்தை ஆதரித்தும், சிலர் இதை எதிர்த்தும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் பங்காக ஒரு சோகத்தை பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியர்களிடையே ஒற்றுமையை, தேசப்பற்றை வளர்த்ததில் விளையாட்டுக்கு பெரும் பங்கு உண்டு. அதிலும் 140 கோடி மக்களையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வரும் வலிமை கிரிக்கெட் என்ற ஒரு விளையாட்டுக்கு மட்டுமே உண்டு.
தொலைக்காட்சியில் கிரிக்கெட் ஒளிபரப்பு தொடங்கியது முதலே இந்தியா என்பதை குறிக்க சுருக்கமாக "IND" என்ற பதமே திரையில் காட்டப்படும். ஒவ்வொரு நாட்டுக்கும் பெரும்பாலும் அந்த நாட்டின் முதல் மூன்று எழுத்துக்களை குறிப்பது போலவே இந்தியாவிற்கும் செய்தன ஒளிபரப்பு நிறுவனங்கள்.
அது ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்த ஒரு விஷயம் ஆகும். 1983 உலகக்கோப்பை தொடரை இந்தியா வென்ற போது இந்தியாவில் மிகச் சில வீடுகளில் மட்டுமே தொலைக்காட்சி இருந்தது. அப்போது அதை அதிகம் தொலைக்காட்சியில் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால், 90கள் முதலே தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் கிரிக்கெட் பார்த்த ஒரு தலைமுறையே உண்டு. இப்போதும் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அப்படி தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்ப்பவர்கள் அனைவரும் இந்தியா பேட்டிங் செய்யும் போது, திரையில் நிமிடத்துக்கு ஒரு முறை உற்று நோக்கும் ஒரு பதம் "IND". அதை ஒட்டிதான் இந்திய அணியின் ஸ்கோர் இடம் பெற்று இருக்கும்.
இப்போது இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றினால், அணியின் உடையிலும் பாரத் என மாற்ற வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன. அதே போல, IND என்ற பதத்தை "BHA" என மாற்ற வேண்டும் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
இதை நினைத்து தான் சில கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் பழைய நினைவுகளை அசைபோட்டு வருகின்றனர். IND என்ற பதம் ஒரு தனி ஃபீலிங்க்கை அளித்ததை மறக்க முடியுமா? என தங்களின் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.