டெல்லி : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்திருப்பது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியினருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்த வருகிறார்கள்.குறிப்பாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணியை கொண்டாடுகிறார்கள்.

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பலரும் வாழ்த்து செய்திகளை வெளியிட்டு இருக்கிறார்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஆப்கானிஸ்தான் அணி இன்று மிகப் பிரமாதமாக விளையாடினார்கள். இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்றிருப்பது நிச்சயம் மகிழ்ச்சியை தருகிறது.
இது அந்த அணி வீரர்கள் உடைய உழைப்புக்கும் திறமைக்கும் கிடைத்த வெற்றி ஆகும் என பாராட்டுகிறார். இதேபோன்று தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ள பதிவில் இன்றைய நாள் மிகவும் அயற்சியாக இருந்தது. ஆனால் இது அனைத்தையும் ஆப்கானிஸ்தான் அணி மதிப்பு மிக்கவையாக மாற்றி விட்டது. அவருடைய உத்வேகத்தை பார்த்து நிச்சயம் நான் மகிழ்ந்தேன் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள ரவி சாஸ்திரி ஆப்கானிஸ்தான் அணிக்கு என்னுடைய சல்யூட், உலகக் கோப்பையில் நீங்கள் மிகப்பெரிய ஒரு அப்செட்டை இங்கிலாந்து அணிக்கு கொடுத்திருக்கிறீர்கள். இன்னும் சொல்லப்போனால் கிரிக்கெட் வரலாற்றிலேயே இது மிகப்பெரிய அப்செட் ஆக நான் கருதுகிறேன். உங்களுக்கு எனது மரியாதைகள் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள சேவாக், ஆப்கானிஸ்தான் தற்போது சிறப்பாக விளையாடுவதால் இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற அணிகள் அரையிறுதிக்கு செல்ல கடினமாக மாறிவிட்டதாக கூறியுள்ளார். இதனிடையே இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாஹனை கிண்டல் செய்யும் விதமாக வசீம் ஜாபர் நீங்கள் தற்போது நன்றாக இருக்கிறீர்களா என பதிவிட்டு இருக்கிறார். மைக்கேல் வாஹனை அடிக்கடி ட்விட்டரில் ஓட்டும் வசீம் ஜாபருக்கு இன்று நல்ல கன்டென்ட் கிடைத்து விட்டது.