மும்பை : 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க முதற்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி.
வரும் திங்கள் அன்று புதிய விளையாட்டுக்களை சேர்க்க உறுப்பினர்கள் இடையே ஓட்டுப் பதிவு நடைபெறும். அதன் முடிவில் முக்கிய விளையாட்டான கிரிக்கெட் நிச்சயம் தேர்வாகும் என் கூறப்படுகிறது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால் இனி டி20 உலகக்கோப்பை மற்றும் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வெற்றியை விட ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே கிரிக்கெட் அணிகளின் பெரிய கனவாக இருக்கும்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஒலிம்பிக் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் எந்த புதிய விளையாட்டுக்களை சேர்க்கலாம் என்பது குறித்த ஆலோனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் தலைமையில் மும்பையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் டி20 கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக் தொடரில் சேர்க்க முதற்கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கிரிக்கெட் விளையாட்டுடன், பேஸ்பால் / சாப்ட்பால், பிளாக் கால்பந்து (Flag football), ஸ்குவாஷ் மற்றும் லாக்ரோஸ் என மொத்தம் ஐந்து புதிய விளையாட்டுக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
வரும் திங்கள் அன்று நடக்கும் ஓட்டுப் பதிவில் இந்த ஐந்து விளையாட்டுக்களையும் சேர்க்க உறுப்பினர்கள் தங்கள் தெரிவிக்க உள்ளனர். கிரிக்கெட் நிச்சயம் சேர்க்கப்படும் என கருதப்படுகிறது. ஏற்கனவே, இதற்காக அமெரிக்காவில் மூன்று கிரிக்கெட் மைதானங்கள் தயாராகி உள்ளன.
இதில் ஒலிம்பிக் அமைப்பு மற்றும் அதை நடத்தும் நாடுகளுக்கு பெரிய லாபம் உள்ளது. கிரிக்கெட் சேர்க்கப்பட்டால் எப்போதும் இல்லாத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகளை காண கூடும். அது மற்ற விளையாட்டுக்களின் அளவை விட அதிகமாக இருக்கும்.
தற்போது ஐபிஎல் டி20 தொடர் தான் கிரிக்கெட்டின் மிகப் பெரிய தொடராக உள்ளது. அதன் வெற்றியே ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க அனைவரையும் தூண்டி இருக்கிறது. சமீபத்தில் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது. அதில் இந்தியா மகளிர் பிரிவு மற்றும் ஆடவர் பிரிவில் இந்தியா இரண்டு தங்கப் பதக்கம் வென்றது.
இனி இந்தியா ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டில் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே பெரிய லட்சியமாக இருக்கும். உலகக்கோப்பை இனி இரண்டாம் இடத்தில் தான் இருக்கப் போகிறது.