377 ரன்களில் இந்தியா டிக்ளேர்- 2-வது இன்னிங்ஸில் நியூசிலாந்து பெரும் போராட்டம்!
கான்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து வெல்ல 434 ரன்கள் தேவை என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 318 ரன்களைக் குவித்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 262 ரன்கள் எடுத்தது.
வில்லியம்சன் 75 ரன்னும், டாம் லாதம் 58 ரன்னும் எடுத்தனர். ஜடேஜா 5 விக்கெட்டும், அஸ்வின் 4 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

159 ரன்கள்...
56 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா நேற்றைய 3வது நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து இருந்தது. முரளி விஜய் 64 ரன்னும், புஜாரா 50 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

முரளி விஜய்- புஜாரா அபாரம்
இன்று 4வது நாள் ஆட்டம் நடந்தது. 2வது விக்கெட்டுக்கு முரளி விஜய் - புஜாரா ஜோடி 133 ரன் எடுத்தனர். முரளி விஜய் 76 ரன் எடுத்து இருந்த போது அவரது பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 185 ஆக இருந்தது.

ரோகித்- ஜடேஜா
பின்னர் கோஹ்லி- புஜாரா ஜோடியும் நிதானமாக விளையாடி ரன்களைக் குவித்தது. இந்த ஜோடியும் அவுட் ஆனது. ஜடேஜாவும் ரோகித் சர்மாவும் விளையாடி வந்தனர். ரோகித் சர்மா 68 ரன்கள்; ஜடேஜா 50 ரன்கள் எடுத்திருந்தனர்.

டிக்ளேர்
5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து முதல் டெஸ்டில் வெல்ல 434 ரன்கள் தேவை என்ற இலக்குடன் அந்த அணி 2-வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

தடுமாற்றம்...
பின்னர் இன்றைய ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளுக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணி தடுமாறி வருவதால் இந்தியா வெற்றி பாதையை நோக்கி பயணித்து வருகிறது.


Click it and Unblock the Notifications