செஞ்சுரியன்: தென் ஆப்பிரிக்க வீரர்களின் புயல் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸை 136 ரன்களுக்கு இழந்தது இந்தியா.
டேல் ஸ்டெயின் மற்றும் மார்னே மார்க்கல் ஆகிய இருவரும் இந்திய பேட்டிங் வரிசையை சின்னாபின்னாப்படுத்தி விட்டனர்.
டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நேற்று தொடங்கியது. மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது.
முதலில் இந்தியா பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள், இந்திய பேட்டிங்கை பதம் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
வேஷாக் முட்டையுடன் முதலில் வெளியேறினார். பின்னர் போனார் கம்பீர். அவரது பங்கு ஜஸ்ட் 5 ரன்கள்தான். அடுத்து சற்று நிலைத்து ஆட முயன்ற டிராவிடையும், சச்சினையும் பிரித்தார் மார்க்கல். டிராவிட் 14 ரன்களுடன் வெளியேற தொடர்ந்து லட்சுமண் 7 ரன்களிலும், ரெய்னா ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
சச்சின் டெண்டுல்கர் மட்டுமே சற்று அதிரடியாக ஆடி 36 ரன்களை எடுத்தார். சச்சின் மட்டுமே தென் ஆப்பிரிக்க பந்து வீச்சைக் கண்டு பயப்படாமல் ஆடினார். ஆனால் அவரை நிலைக்க விடவில்லை ஸ்டெயின். அவர் போட்ட பந்தில் சச்சின் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.
டோணி 33 ரன்களுடனும், உனத்கத் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று காலை 2வது நாள் ஆட்டம் தொடங்கியதுமே மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் டோணி அவுட் ஆகி வெளியேறினார்.
ஸ்டெயின் 3 விக்கெட்களையும், மார்க்கல் 5 விக்கெட்களையும் வீழ்த்த, கல்லிஸ் ஒரு விக்கெட்டை எடுத்தார்.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆரம்பத்தில் நிதானமாக ஆட ஆரம்பித்த தென் ஆப்பிரிக்கா பின்னர் சற்று வேகம் காட்டியது.
தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஸ்மித்தும், ஆண்டர்சனும் அபாரமாக ஆடினர். ஸ்மித் 62 ரன்களும், ஆண்டர்சன் 77 ரன்களைக் குவித்தும் வெளியேறினர். இருவரையும் ஹர்பஜன் சிங் ஆட்டமிழக்க செய்தார்.
தற்போது அம்லாவும், கல்லிஸும் ஆடி வருகின்றனர்.
48வது ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்திருந்தது.