கொழும்பு: இந்தியா, இலங்கை இடையே நடந்த 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
கடந்த நாலரை நாட்களாக இரு அணிகளும் தங்களது முதல் இன்னிங்ஸையே ஆடி வந்தன. முதலில் ஆடிய இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 642 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து இந்தியா தனது பேட்டிங்கைத் தொடங்கியது. இந்தியத் தரப்பில் சச்சின் இரட்டை சதம் போட்டார். சுரேஷ் ரெய்னா 120 ரன்களைக் குவித்தார். இது அவருக்கு முதல் டெஸ்ட் சதமாகும். கேப்டன் டோணி 76 ரன்களைச் சேர்த்தார். ஷேவாக் 99 ரன்களில் அவுட் ஆகி சதத்தை இழந்தார். முரளி விஜய் 58 ரன்கள் எடுத்தார்.
நேற்றைய நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 விக்கெட்களை இழந்து 669 ரன்களுடன் இருந்தது. இன்று காலை தொடர்ந்து பேட் செய்து 707 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இதன் மூலம் இலங்கையை விட 65 ரன்கள் அதிகம் எடுத்தது இந்தியா. இலங்கை அடுத்து 2வது இன்னிங்ஸை தொடங்கியது. 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இரு அணிகளின் கேப்டன்களும் டிராவுக்கு ஒத்துக் கொண்டனர். இதனால் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஆட்டநாயகனாக இலங்கை கேப்டன் குமார சங்கக்காரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டியில் இலங்கை பெரும் வெற்றியைப் பெற்றது என்பது நினைவிருக்கலாம்.
அடுத்து ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் சந்திக்கவுள்ளன.